அரசியல் பகை.. கடலூரில் நடந்த கொலை.. தீயாக பரவிய கலவரம்.. வீடுகளுக்கு வைக்கப்பட்ட தீ.. பரபரப்பு!
கடலுார்: கடலூர் மாவட்டம் குண்டு உப்பலவாடி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி கொலையும், அதை தொடர்ந்து நடந்த கலவரமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் குண்டு உப்பலவாடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு நடந்த ஊராட்சி தேர்தலும் அதன்பின்வந்த தேர்தல் முடிவுகளும் இந்த சண்டைக்கு காரணமாக மாறியுள்ளது. இங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் ஊராட்சி தலைவர் மாசிலாமணியின் மனைவி பிரவீனா போட்டியிட்டுள்ளார்.
அவரை எதிர்த்து மதியழகன் என்பவரின் மனைவி சாந்தி என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்த உள்ளாட்சி தேர்தலில் சாந்தி வெற்றிபெற்றார்.
தேர்தல் பகை
இந்த வெற்றி காரணமாக இரண்டு குடும்பத்திற்கும் இடையே தேர்தல் பகை இருந்துள்ளது. இவர்கள் இரண்டு குடும்பத்திற்கும் இடையே அவ்வப்போது சண்டை, மோதல், கைகலப்பு வந்து இருக்கிறது . ஏற்கனவே இரண்டு குடும்பங்களும் மாறி மாறி போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர். இந்த சண்டை நேற்று கொலையில் முடிந்துள்ளது.
கொலை செய்யப்பட்டார்
முன்னாள் ஊராட்சி தலைவர் மாசிலாமணியின் தம்பி மதிவாணன் நேற்று இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். தாழங்குடா கிராமத்தில் வைத்து மதிவாணன் கொலை செய்யப்பட்டு உள்ளார். அங்கு இருக்கும் காட்டு பகுதி ஒன்றில் வைத்து இவரை கும்பல் ஒன்று கொடூரமான தாக்கி கொலை செய்துள்ளது. மோசமாக அரிவாளால் தாக்கி இவரை கொலை செய்துள்ளனர்.
யார் கொன்றது
தற்போதைய ஊராட்சி தலைவர் சாந்தி மற்றும் அவரின் கணவர் மதியழகன் ஆகியோர் திட்டமிட்டு இந்த கொலையை நிகழ்த்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஊராட்சி தலைவர் மாசிலாமணியின் தம்பி மதிவாணன் கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பெரிய கலவரமே ஏற்பட்டுள்ளது. மாசிலாமணியின் ஆட்கள் கோபத்தில் அங்கு கலவரம் செய்து வருகிறார்கள்.
பெரிய கலவரம்
மதிவாணன் கொலை காரணமாக குண்டு உப்பலவாடி கிராமத்தில் 10க்கும் அதிகமான வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாழங்குடா பகுதியில் இருந்த 30 படகுகள் தீ வைக்கப்பட்டுள்ளது. 10 பைக்குகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்போது பெரிய கலவரமே ஏற்பட்டுள்ளது. தற்போது போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, கலவரத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.