ரவுடி கோழி பாண்டியன்.. வெடிகுண்டு வீசி.. அரிவாளால் வெட்டி கொடூரக் கொலை.. சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரத்தில் ரவுடி கோழி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சிதம்பரம்: பிரபல ரவுடி கோழி பாண்டியனை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் சாய்த்து வீழ்த்தியது ஒரு மர்ம கும்பல். இந்த படுகொலை காரணமாக சிதம்பரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியை சேர்ந்தவர் கோழி பாண்டியன். 40 வயதான இவர் ஒரு பிரபலமான ரவுடி. கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு அண்ணாமலை நகர் ராஜா முத்தையா ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் கோழி பாண்டியன் தனது நண்பருடன் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் திடீரென மர்ம கும்பல் ஒன்று வந்து, சாப்பிட்டு கொண்டிருந்த கோழி பாண்டியன் மீது குறி பார்த்து நாட்டு வெடிகுண்டை வீசியது. இது வெடித்து சிதறியதுமே அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். அப்போதும் ஆத்திரம் தீராமல், அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
ரத்தவெள்ளத்தில் கோழி பாண்டியன் உயிரிழந்தார். தகவலறிந்து கடலூர் மாவட்ட எஸ்பி அபிநவ், உள்ளிட்ட போலீசார் நேரடியாக விரைந்து வந்துவிட்டனர். இறந்து போன கோழி பாண்டியனின் உடலைக் கைப்பற்றியதுடன், கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் வெடிக்காத குண்டுகளை சம்பவ இடத்திலும் கைப்பற்றினர். இந்த படுகொலை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்