மரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்?
ரவுடி கோழி பாண்டியன் வெட்டி கொல்லப்பட்டதன் பின்னணி வெளியாகி உள்ளது.
Recommended Video
கடலூர்: மரணத்துக்கு காத்திருக்கிறேன்.. என்று படுகொலை செய்யப்பட்ட ரவுடி கோழி பாண்டியன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதன் அர்த்தம் இதுவரை புரியவில்லை.
சிதம்பரத்தில் பெரிய ரவுடிதான் கோழிபாண்டியன். நிறைய வழக்குகள் இவர் மீது உள்ளன. ஓட்டலில் சாப்பிட்டு கொண்டே இருந்த பாண்டியன் மீது வெடிகுண்டை வீசியது ஒரு மர்மகும்பல். இதில் அங்கேயே உடல் சிதறி விழுந்த கோழி பாண்டியனை, ஆத்திரம் தீராத அந்த கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்து தப்பித்துள்ளது.
கடந்த 5 வருஷத்துக்கு முன்பு கலுங்குமேடு பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் குமார், அவரது தம்பி ராஜேஷ் மீது மர்மநபர்கள் வெடிகுண்டு வீசியதுடன், இருவரையும் அரிவாளாலேயே வெட்டி கொன்று ராஜா முத்தையா ஆஸ்பத்திரி முன்பு வைத்து விட்டு சென்றார்கள். இந்த இரட்டை கொலைக்கு பக்கத்து வீட்டுக்காரர் கோழி பாண்டியன் தான் கொலையாளிகளுக்கு துப்பு கொடுத்ததாக கூறப்பட்டது.
இப்போது அந்த இரட்டை கொலை போலவே, கோழி பாண்டியனின் படுகொலையும் நடந்துள்ளது. அதேபோல, வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளனர். அதனால் இரட்டைக் கொலையின் பழிவாங்கலாக இந்த படுகொலை இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அல்லது பெண் விவகாரமாக இருக்குமோ என்ற கோணத்திலும் அலசப்படுகிறது.
3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை போலீசார் கையில் எடுத்தாலும், இன்னும் சிதம்பரத்தில் பதற்றம் தணியவில்லை. போலீசார் குவிக்கப்பட்டும், அண்ணாமலை நகரில் கடைகள் மூடப்பட்டுதான் உள்ளன. இப்படி கொடூரமாக கொல்லப்படுவதற்கு முன்னதாக, "மரணத்திற்கு காத்திருக்கிறேன்" என்று கோழி பாண்டியனின் கடைசி ஃபேஸ்புக் பக்கத்தில் புரொபைல் பிக்சர் வைத்திருப்பது நெஞ்சை பிசைகிறது!