சஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம்.. பேரறிவாளனுக்கு ஒரு சட்டமா? அற்புதம்மாள் ஆவேசமாக கேள்வி
கடலூர்:வடநாட்டு நடிகரான சஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம், பேரறிவாளனுக்கு ஒரு சட்டமா என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி மார்ச் 9ம் தேதி சென்னையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மனிதச்சங்கிலி நடைபெற உள்ளது. அதற்கு ஆதரவு தெரிவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் அற்புதம்மாள் மக்களை சந்தித்து வருகிறார்.
கடலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தீர்மானம்
சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரை தமிழக அரசு விடுதலை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் அதற்கான உத்தரவை வழங்கியுள்ளது.
ஆளுநர் முட்டுக்கட்டை
இருப்பினும் இந்த விவகாரத்தில் ஆளுநர்தான் முட்டுக்கட்டையாக உள்ளார். ஆனால், நாங்கள் சட்டப்படியாக தான் செயல்படுகிறோம்.
சஞ்சய் தத் விடுதலை
ஆளுநர் சட்டத்தை மீறி செயல்படுகிறார். மும்பை தாக்குதலில் தொடர்புடைய சஞ்சய் தத் நடிகர் என்பதால், 5 ஆண்டுகளில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அற்புதம்மாள் கேள்வி
வடநாட்டுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டம் என்று தான் உள்ளது. 7 பேரை விடுதலை செய்ய கோரி, மார்ச் 9-ம் தேதி, 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அற்புதம்மாள் கூறினார்.