லுங்கியை மடித்து கட்டி.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. சொத்துக்காக நடந்த கடலூர் ஷாக்!
சொத்துக்காக பெற்ற மகன்களே தந்தையை தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது
Recommended Video
கடலூர்: சொத்து வேண்டும் என்று கேட்டு.. பெற்ற தந்தையை கொடூரமாக 2 மகன்கள் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது... அத்துடன், மகன்கள் தன்னை தாக்குவது குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதைவிட அடுத்தக்கட்ட அதிர்ச்சியில் நம்மை ஆழ்த்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கீழ்அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்... வயது 74 ஆகிறது.. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர்.. எல்லோரையுமே கஷ்டப்பட்டு வளர்த்தார்.. ஆனாலும் வளர்ந்துவிட்ட நிலையில், மகன்கள் அவரை கவனிக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இதில் கடைசி மகன் நித்தியானந்தம் மட்டும் வெளிநாட்டில் வேலை செய்து பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். அந்த பணத்தை சேமித்து வைத்த கோவிந்தராஜ், தாம் சுயமாக சம்பாதித்த நிலத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டினார்... கடைசியில் பாடுபட்டு உழைத்த மகன் நித்தியானந்தம் ஊருக்கு வந்தபிறகு அவர் பெயரில் அந்த வீட்டை எழுதிவைத்தார்.
இதுதான் முதல் 2 மகன்களான சிவகுமார், ரங்கநாதனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.. அந்த புதிய வீட்டில் கோவிந்தராஜ், நித்யானந்தம் குடும்பத்துடன் தங்கி இருந்தபோது, அங்கு சென்ற முதல் மகனும், 3-வது மகனும் வீட்டை அபகரித்துவிட்டு, அவரை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளனர். மேலும் நித்தியானந்தத்தின் மனைவி, பிள்ளைகளையும் அடித்து விரட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தன்னை வெளியே அனுப்பியதால், சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை ரயில்வே ஸ்டேஷனில் வந்து கோவிந்தராஜ் தங்கியிருந்துள்ளார். ஆனால் அங்கேயும் வந்த அதே 2 மகன்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். ஒருவர் லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு காலால் எட்டி உதைக்க.. இன்னொருவர் இதனை வீடியோவாக எடுக்கிறார்.
பிறகு அவரும் எகிறி எகிறி அப்பாவை அடிக்கிறார்.. பிள்ளைகள் தன்னை தாக்குவதாக போலீசில் புகார் அளித்தள்ளார் கோவிந்தராஜ், ஆனால் நடவடிக்கை இல்லை என்று தெரிந்ததும் ஏற்கனவே நொந்து போயிருந்தவர், மேலும் இடிந்து போனார்.
அதனால், மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் ஆபீசில் மனுவையும் தந்துவிட்டு.. கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர்... சொத்துக்காக பெற்ற மகன்களே கொடூரமாக தாக்கி அப்பாவை வீட்டை விட்டு வெளியே தள்ளியதுடன், தீக்குளிக்கவும் முயன்ற இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.