சிறு போராட்டங்களை கூட காவல்துறையை வைத்து அடக்கும் தமிழக அரசு.. மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
சிதம்பரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், அத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக சிதம்பரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து, மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில், ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்படும் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகமே பாலைவனமாகி விடும் என எதிர்ப்பாளர்கள் எச்சரித்து வருகின்றனர். தமிழக மக்கள் தங்களது சொந்த பகுதிகளிலேயே அகதிகளாக வாழ நேரிடும். இதனால் ஏராளமான இயற்கை பேரிடர் வந்து தாக்கும் அபாயம் ஏற்படும் எனவும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெ.சமாதியில் மரியாதை செலுத்த 9 எம்எல்ஏக்கள் தடுக்கப்பட்டனரா? திண்டுக்கல் சீனிவாசன் பரபர விளக்கம்!
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் சென்று ஹைட்ரோ கார்பன் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிதம்பரம் அருகே கிள்ளையில், ஹைட்ரோகார்பன் அபாய திட்டம் குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி இரு சக்கர வாகன பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இருசக்கர வாகன பேரணிக்கு காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து தடைவித்தது.
இதனால் ஆத்திரமடைந்த கட்சியினர் இரு சக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் கிள்ளை- பரங்கிப்பேடை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அருகிலிருந்த திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் 20 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தமிழகத்தில் மக்கள் குடிக்க கூட நீரின்றி தெரு தெருவாக அலைகின்ற இச்சூழலில் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக சாடினார். தமிழக அரசின் அங்கமான காவல்துறை வேதாந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் போல செயல்படுவதாக குறிப்பிட்டார்
அரசுக்கு எதிராக மக்களின் உணர்ச்சிமிக்க சிறு சிறு போராட்டங்களை கூட காவல்துறையை வைத்து அடக்க முயன்றால், பிறகு ஆத்திரம் தாங்காமல் ஒருகட்டத்தில் வெகுண்டெழ வேண்டியிருக்கும். பின்னர் அது தூத்துக்குடி ஸ்டர்லைட் சம்பவம் போல் தூப்பாக்கிசூட்டில் போய் முடிந்தாலும் முடிந்து விடும்.
பல தடைகள் வந்தாலும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தினார்.