நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது பெரும் சாதனை.. இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும்.. ஸ்டாலின்
கடலூர்: திமுகவை யாராலும் அழிக்க முடியாது என கூறியுள்ள அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போன வரலாறு உண்டு என்றார்.
கடலூரில் நடைபெற்று வரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மக்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் திமுகவினர் தான் என்ற வகையில் நம் தொண்டர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றார். நாற்பதும் நமதே என்ற முழக்கத்துடன் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம். தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றி என்பது சாதாரணமானதல்ல, பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. இந்த வெற்றிக்காக நன்றி சொல்லவே தாம் தற்போது கடலூருக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அரசியல் லாபத்திற்காக அமைந்த கூட்டணி அல்ல எங்கள் கூட்டணி கொள்கைக்காக அமைந்த கூட்டணி இது என்றார். மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்யும் கொடுமைகளை உரிய ஆதாரத்துடன் மக்கள் மன்றத்திற்கு எடுத்து சென்றோம்.
தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் அதிமுக தலைமையிலான அரசு கவிழும் இது உறுதி என்ற ஸ்டாலின், டெல்டா மாவட்ட மக்களை ஒன்று திரட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார்.
மேலும் பேசிய அவர் மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வராததால், மக்கள் பிரச்சனைகளை தீர்க்க திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன
திமுக கூட்டணியின் வெற்றியால் நம் தாய்மொழியாக இருக்க கூடிய செம்மொழியான தமிழ் நாடாளுமன்றத்தில் ஒலித்தது. நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகப்பெரிய சாதனை, இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும். தமிழக மக்களின் வழக்கறிஞர்களாக திமுக எம்.பிக்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நிலவுவது தண்ணீர் பற்றாக்குறையே பஞ்சம் அல்ல என புது விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு, லாரி லாரியாக தண்ணீர் கொடுக்கப்பட்டு வருவதாக கூறுவது எதற்கு என வினவினார். தண்ணீர் பஞ்சம் இல்லை என்றால், ஜோலார்பேட்டையில் இருந்து ஏன் தண்ணீர் எடுத்துவர வேண்டும்
தலைநகர் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விடும் என திமுக பலமுறை சட்டமன்றத்தில் எச்சரித்தும், தமிழ அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சாடினார்.