ஏளனம் செய்த ஆசிரியர்களுக்கு சமர்பணம்..10ம் வகுப்பில் பாஸ் ஆக்கிய முதல்வருக்கு நன்றி.. மாணவன் போஸ்டர்
கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஒரு குறும்புக்கார மாணவன் தன்னை 10ம் வகுப்பில் பாஸ் ஆக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என்று கூறி போஸ்டர் தயார் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு தேர்வை கடந்த மார்ச் மாதம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ஜூன் மாதம் தேர்வை நடத்த முயன்ற அரசு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தள்ளி வைத்தது.
எந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்? #Binod
எடப்பாடி அறிவிப்பு
ஆனால் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே சென்றதால் நடத்தவே முடியாத அளவுக்கு நிலைமை மாறியது. இதையடுத்து 10ம்வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அத்துடன் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
அனைவரும் தேர்ச்சி
அத்துடன் 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு ஆகியவற்றுடன் வருகை பதிவேடு ஆகியவற்றை கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி நேற்று முன்தினம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
கடலூர் மாணவன்
இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே குருங்குடி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த நிஷாந்த் தனது பேஸ்புக்கில் ஒரு போஸ்டர் ரெடி செய்து பதிவிட்டுள்ளார்.
வெற்றி சமர்பணம்
அந்த போஸ்டரில் 10ம் வகுப்பில் என்னை பாஸ் போட்டு வரலாற்று சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். அத்துடன் என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றி சமர்பணம் என்றும் கூறியுள்ளார். இரு கைகளையும் தூக்கி கும்பிட்டபடி அந்த போஸ்டரில் மாணவர் இருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.