கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற முதியவர் பலி.. மே 3 வரை ஊரடங்கு தளர்த்தப்படாது.. கடலூர் ஆட்சியர்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவா்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் டில்லியில் நடைபெற்ற மத மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடா்பில் இருந்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் அனைவருக்கும் கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 5 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது 19 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர், சளி மற்றும் இரும்பல் காரணமாக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில், நேற்று சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்துள்ளார். அவரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
இதனிடையே மே 3 ஆம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் மே மாதம் 3-ந்தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினர் மாவட்டத்தில் பரவும் கொரோனாவை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய 3 மண்டலமாக பிரித்து உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலை இருந்தது. அதன்பிறகு குறிப்பிட்ட சில நாட்களில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சிவப்பு மண்டலத்துக்குள் கடலூர் வந்து விட்டது. இதனால் இந்த ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டிய நிலை உள்ளது.
அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது. நாளை முதல் இந்த ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும். ஊரடங்கை முழுமையாக விலக்கி கொள்ள சாத்தியம் இல்லை என்பதை மீண்டும் மாவட்ட மக்களுக்கு தெளிவுப்படுத்துகிறோம் என்றார்.