மரணம் ஒருபக்கம், திருமணக்கோலத்தில் ஓட்டு போடுபவர்கள் ஒருபக்கம்... சோகமும் சுவாரசியமும் கலந்த நாள்
Recommended Video
கடலூர்: தமிழகம், கர்நாடகம், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் 95 தொகுதிகளில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் எதிர்பார்த்ததை விட மிகவும் விறுவிறுப்பாகவே நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான வாக்காளர்கள் கண்ணும் கருத்துமாக வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்றி வருகின்றனர். இந்த தேர்தல் நிகழ்வுகளில் பல்வேறு வகையாக சோக சம்பவங்களும், சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
சோகம்:
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் வயது முதிர்ச்சி மற்றும் தள்ளாமை காரணமாக பலியாகி இருக்கிறார்கள். ஈரோட்டில் முருகேசன் என்ற முதியவர் இன்று காலை வாக்களிக்க சென்றார். சில நிமிடம் வரிசையில் நின்ற அவர் வயது முதிர்வு காரணமாக எல்லோருக்கும் முன் சென்று வாக்களித்தார். அதன்பின் வீட்டிற்கு சென்ற அவர், செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்து பலியானார். அதேபோல் சேலத்தில் கிருஷ்ணன் என்ற முதியவர் வாக்குச்சாவடியில் பலியானார்.
சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பெண் மரணமடைந்தார். மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டையில், சிசிலி மோரல் என்பவர் உயிரிழந்தார். பட்டியலில் பெயர் இல்லாததால் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தவர் ஒருகட்டத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
சுவாரஸ்யம்:
தமிழகத்தில் நெல்லையை அடுத்த வள்ளியூரில் புதுமணத் தம்பதிகளான முத்துராம் - சுப்புலெட்சுமி ஆகியோர் மணக்கோலத்திலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.அதே போல கடலூரை அடுத்த விருத்தாசலத்தில் அமலா என்ற புது மணப்பெண் மணக்கோலத்திலேயே வந்து தனது வாக்கினை செலுத்தினார்.
காலையில் திருமணம் முடிந்த நிலையில் அமலா மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்தார். திருமணம் நடந்தாலும் தேர்தல் நாளான இன்று தங்களது ஜனநாயக கடைமையை தவறாது நிறைவேற்றிய தம்பதிகளை பலரும் வெகுவாக பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது