உசுர பணயம் வச்சு திருட வந்தா.. கல்லாவை தொடச்சி வெச்சிருக்கியே.. கடைக்காரருக்கு லட்டர் எழுதிய திருடன்
மளிகை கடைக்காரருக்கு திருடன் கடிதம் எழுதி வைத்துள்ளார்
கடலூர்: "உயிரை பணயம் வச்சு திருட வந்தா.. காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சிருக்கியே.." என்று மளிகை கடையில் திருட வந்த ஒருவர் கடைக்காரருக்கு லட்டர் எழுதிவிட்டு சென்றுள்ளார்.
நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் மளிகைக்கடை ஒன்றினை நடத்தி வருபவர் ஜெயராஜ். வயசு 65 ஆகிறது. இவர் நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு போய்விட்டார்.
மீண்டும் இன்று காலை கடையை திறக்க வந்தார். கடையை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தால், கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியானார்.
நேற்று இரவு பூட்டிய கதவு அப்படியே இருக்கவும், யார் உள்ளே வந்திருப்பார்கள், எப்படி வந்திருப்பார்கள் என்று ஜெயராஜ் ஷாக் ஆனார். அப்போதுதான் கடையின் மேற்கூரையை உடைத்து கொண்டு மர்மநபர் உள்ளே வந்தது தெரியவந்தது.
கடைக்குள் நுழைந்த நபர், கல்லா பெட்டியில் பணத்தை திருட வந்திருக்கிறார் போலும். ஆனால் கல்லா பெட்டியில் பணமே இல்லாததால், டென்ஷன் ஆகி உள்ளார். கடையில் இருந்த அரிசி மூட்டைகள், மாவு மூட்டைகளை அங்கிருந்த ஒரு பிளேடு எடுத்து ஆவேசமாக கிழித்துள்ளார்.
பிறகு அந்த மூட்டைக்குள் இருந்த மாவு, அரிசியை வாரி வாரி கோபத்தில் கடை முழுக்க இறைத்துள்ளார். இது மட்டும் இல்லை.. இந்த கோபத்திலும் ஒரு லட்டர் எழுதி வைத்துவிட்டு போயுள்ளார்.
அதில், "உயிரை பணயம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா. அதுக்குதான் இந்த குரங்கு வேலை" என்று எழுதியுள்ளார். இதையடுத்து ஜெயராஜ், மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கவும், விசாரணை நடந்து வருகிறது.