உணவு வாங்கித் தருவதாக சிறுமிகள் கடத்தல்.. பலாத்காரம் செய்த கடலூர் பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை
Recommended Video
கடலூர்: திட்டக்குடியில் பள்ளி மாணவிகள் இருவர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட வழக்கில் கடலூரைச் சேர்ந்த பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த விவசாயி மகள் ராணி (பெயர் மாற்றப்பட்டது). அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கூத்தப்பன்குடிக்காடு பகுதியை சேர்ந்தவரின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டது) அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு 16-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற இருவரும் மாலை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் மாணவிகளின் செல்போனை தொடர்பு கொண்ட போது திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலையில் இருப்பதாகவும் கம்பெனியை விட்டே வெளியே அனுப்பதாததால் அதன் பெயரும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
சிக்னல்
இதைத் தொடர்ந்து போலீஸார் திருப்பூரில் முகாமிட்டு மாணவிகளை தேடி அவர்கள் கிடைக்கவில்லை. இரு மாணவிகளும் விருத்தாசலம், புதுச்சேரி, கோலியனூர், வடலூர் ஆகிய பகுதிகளில் சுற்றி வருவது போல் செல்போன் எண் சிக்னல் காட்டியது.
பாலியல் தொழில்
மேலும் அவர்களிடம் அதிகமாக போனில் பேசியது சதீஷ்குமார் என்று தெரிய வந்தது. அவரது போன் மூலம் பேச வைத்து மாணவிகளை திட்டக்குடிக்கு வரவழைத்து அவர்களை பிடித்து விசாரித்தனர். மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் தள்ளியதாக கூறினர்.
பாலியல் பலாத்காரம்
இதுகுறித்து மேலும் விசாரணையில் அவர்கள் கூறுகையில் இரண்டு மாணவிகளும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்குள்ள தேவாலயத்துக்கு செல்வது வழக்கம். அப்போது பாதிரியார் அருள்தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
விற்பனை
இதனையறிந்த திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த லட்சுமி, மாணவிகளை மிரட்டி திட்டக்குடி பகுதியை சேர்ந்த சிலருக்கு விருந்தாக்கி உள்ளார். பின்னர் இரு மாணவிகளையும் விருத்தாசலத்தை சேர்ந்த கலா என்பவரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு லட்சுமி விற்றுள்ளார். 2 நாள் வைத்திருந்த கலா, அதே பகுதியை சேர்ந்த ஜெமினா என்பவரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.
லாட்ஜ்களில் மாணவிகள்
தொடர்ந்து ஜெமினா, வடலூரில் தங்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த சதீஷ்குமாரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். புதுச்சேரி வில்லியனூர், விழுப்புரம், வடலூர் பகுதியில் உள்ள லாட்ஜ்களில் மாணவிகளை தங்க வைத்து சிலருக்கு சதீஷ்குமார் விருந்தாக்கி உள்ளார்.
ஏராளமானோர் கைது
இதனைதொடர்ந்து மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், பாதிரியார் அருள்தாஸ் (60), வடலூர் சதீஷ்குமார் (28), திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த லட்சுமி என்கிற தனலட்சுமி (30), விருத்தாசலம் கலா (48), ஜெமினா (28) ஆகிய 5 பேரையும் முதலில் கைது செய்தனர்.
விசாரணை
மேலும் நடந்த தொடர் விசாரணையில் ஜெபினா, தமிழ்செல்வி, சர்மிளா, கவிதா, மகாலட்சுமி, நெல்லிக்குப்பம் கிரிஜா, கோலியனூர் பாத்திமா, இவரது கணவர் நம்மாழ்வார், சேலம் அன்பு, அமுதா, மற்றொரு அன்பு, பாலு என்ற பாலசுப்பிரமணியன், சதீஷ் மற்றும் ஓட்டுநர் ஸ்ரீதர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அபராதம்
இதுதொடர்பான வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் குற்றவாளிகள் என கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் தீர்ப்பு விவரங்களை இன்று நீதிபதி வாசித்தார். அதில் கடலூரில் பள்ளி சிறுமிகளை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
என்ன தண்டனை
சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய கலா, தனலட்சுமி, பாத்திமா, ஸ்ரீதர் , மோகனராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை, அதாவது 48 ஆண்டுகள் சிறை தண்டனை. மேலும் மோகன்ராஜ், பாத்திமாவுக்கு தலா இரு ஆயுள், அன்பு என்பவருக்கு 3 ஆயுள் தண்டனையும், ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியனுக்கு தலா 4 ஆயுள் தண்டனையும் வழக்கில் குற்றம்சாட்டிய எஞ்சிய பெண்களுக்கு தலா 10 ஆண்டுகளும் விதிக்கப்பட்டது. ஸ்ரீதர், பாத்திமா, ராஜலட்சுமி ஆகியோருக்கு சிறை தண்டனையுடன் தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இழப்பீடு
அப்போது நீதிபதி கூறுகையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குழந்தைகளை உணவு வாங்கி தருவதாக கூறி கடத்தியதும் கொடுமை இழைத்ததும் ஏற்க முடியாது. திருமணமாகி தங்களது குழந்தை வயதில் உள்ள இரு குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பியது கொடுங்குற்றம் என்று நீதிபதி தெரிவித்தார். தண்டனை அறிவிக்கப்பட்ட 16 பேரில் 8 பேர் பெண்கள் ஆவர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் கடலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.