ஸ்டாலின் சொன்ன வலிமையான வார்த்தை.. நெகிழ்ந்த திருமா.. ராமதாஸ் மீது பரபரப்பு புகார்
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. அப்போது பேசிய திருமாவளவன், மோசமான பிற்போக்கு அரசியலை பாமக நிறுவனர் ராமதாஸ் கையில் எடுத்துள்ளதாகவும், அரசியலுக்காக தன் மீது வீண் வதந்திகளை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிட்டார். இவரை தோற்கடிக்க பாமக மற்றும் அதிமுக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக மற்றும் விசிக இடையே கடும் போட்டி நிலவியது. கடைசி சுற்றில் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.
இதையடுத்து சிதம்பரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கற்றனர்.
இந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், "திமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற அரும் பாடுபட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும், "திமுக தலைவர் ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது திருமா இங்கே வெற்றி பெற்றால் அது திருமாவின் வெற்றி அல்ல இது கலைஞரின் வெற்றி என்றார். அந்த வார்த்தை எவ்வளவு வலிமை மிக்கது என்று அறிந்து திமுகவின் தோழர்கள் என்னுடன் வேலை பார்த்தார்கள்.
இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல்கள்- கோவையில் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
சிதம்பரம் தொகுதியில் அவதூறுகளையும் வதந்திகளையும் புறந்தள்ளி மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். ராமதாஸ் அரசியலுகாக என் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார். அவர் மோசமான பிற்போக்கு அரசியலைக் கையில் எடுத்து உள்ளார் சிதம்பரம் தொகுதி மக்கள் மீது நான் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. எனக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சிறந்த மக்களவை உறுப்பினராக செயல்படுவேன். ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இந்த பகுதியில் சாயப்பட்டறை பிரச்சனை இருக்கிறது. இதுமட்டுமின்றி சாலை பிரச்சனை உள்ளது. இந்த பகுதி மக்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்க எடுப்பேன்" இவ்வாறு கூறினார்.