சிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த தொழிலாளி ஒருவரை, அவரது மனைவி கண் முன்பே முதலை இழுத்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயமணி, தனது மனைவியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முதலை ஒன்று ஜெயமணியை கடித்து இழுத்து சென்றுள்ளது. இதனால் அவரது மனைவி முத்துலெட்சுமி சத்தம் போட்டதை கேட்டு, அங்கு வந்தவர்கள் ஜெயமணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரம் என்பதால் மாயமான ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி பேசிய பெராம்பட்டு கிராம வாசிகள், மாலை 6 மணிக்கு மேல் ஆற்றில் ஜெயமணி குளிக்க சென்றதாக கூறினர்.
அந்த சமயத்தில் அவருடன் ஆற்றில் மூன்றுக்கும் மேற்பட்டோர் குளித்து கொண்டிருந்ததாகவும், நீரில் வந்த முதலை ஜெயமணியை கடித்து இழுத்து சென்றுவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து 3 மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர்.
பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்
இதனிடையே வனத்துறையின் அலட்சியமே தொழிலாளி மாயமானதற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியை தொடர முடியாத நிலையில், தற்போது மீண்டும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. முதலைகளிடம் மனிதர்கள் சிக்கி கொள்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.