பண்ருட்டியில் மீண்டும் போட்டி...வீடு பால்காய்ச்சி தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கிய 'தவாக' வேல்முருகன்
பண்ருட்டி: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன் மீண்டும் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக பண்ருட்டியில் உள்ள வீட்டை சீரமைத்து கணபதி ஹோமத்துடன் தேர்தல் பணிகளையும் தொடங்கிவிட்டார் வேல்முருகன்.
2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பண்ருட்டி தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தார் வேல்முருகன். 2011 சட்டசபை தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
பாமக தலைமையுடனான கருத்து வேறுபாட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கினார் வேல்முருகன். 2016 சட்டசபை தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியை எதிர்கொண்டார் வேல்முருகன்.
தற்போதைய சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் வேல்முருகனின் தவாக இடம்பெறுகிறது. கடந்த சில மாதங்களாகவே பண்ருட்டி தொகுதியை குறித்து வேல்முருகன் களப்பணிகளையும் தொடங்கினார். இந்த நிலையில் பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தமது வீட்டை சீரமைத்து கணபதி ஹோம பூஜையுடன் பால் காய்ச்சி தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார் வேல்முருகன். இதனைத் தொடர்ந்து தமது கட்சி நிர்வாகிகளுடன் வேல்முருகன் புதிய வீட்டில் தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனைகளை நடத்தினார்.