நிலம் மட்டும் வேண்டும்! வேலை கிடையாதா? NLC -யை சும்மா விடமாட்டேன்! கொதிக்கும் வேல்முருகன்!
கடலூர்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு பணி வழங்காமல் புறக்கணிக்கும் அந்நிர்வாகத்தின் செயல்பாடானது அந்நிலத்தில் வாழும் மக்களுக்குச் செய்யப்படும் பச்சைத்துரோகம் எனச் சாடியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஒருபுறம் உயரும் மின்தேவை.. மறுபுறம் வேகமாக காலியாகும் நிலக்கரி.. நாட்டில் என்னதான் நடக்கிறது?
என்.எல்.சி.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடும், பிற உரிமைகளும் இன்னும் வழங்கப்படாத நிலையில், மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, 26 கிராமங்களில் இருந்து 12,125 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகம், அதற்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
நிலக்கரிச் சுரங்கம்
அதன்படி, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம், வீட்டு மனைகளுக்கு ஊரகப்பகுதியில் சென்ட்டுக்கு ரூ.40,000, நகரப்பகுதிகளில் ரூ.75,000 வழங்கப்படும். மறுகுடியமர்வுக்காக 2178 சதுர அடி மனையில் 1000 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும். ஒப்பந்த வேலைவாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் என்.எல்.சி அறிவித்திருக்கிறது.
இந்திக்காரர்கள்
முக்கியமாக, நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்களையோ, அந்நிறுவனப் பணியிலிருந்து இறந்தோரின் வாரிசுகளையோ, தொழிற் பழகுநர் பயிற்சி முடித்தவர்களையோ முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இந்திக்காரர்களையும், வடநாட்டுக்காரர்களையும் அமர்த்துவது என்பது புதியதல்ல.
பச்சைத்துரோகம்
ஒப்பந்தப்படி, நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், திட்டமிட்டுப் புறக்கணிக்கும் அந்நிர்வாகத்தின் செயல்பாடானது அந்நிலத்தில் வாழும் மக்களுக்குச் செய்யப்படும் பச்சைத்துரோகமாகும்.
என்.எல்.சி. வரலாறு
தமிழர் ஜம்புலிங்கனாரின் பெருங்கொடையாலும், பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியாலும் 1956 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதற்காகவும், தமிழகத்தின் வளத்தை மூலதனமாகக்கொண்டு தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும் உருவான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்பது ஏற்புடையதாக இல்லை.
ஏற்க இயலாது
மேலும், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடியவை. ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்கள் அவை. இந்த நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை கொட்டிக்கொடுக்கும் நிலையில், அந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
போராட்டம் நடத்துவேன்
அப்பகுதி மக்களின் போராட்டங்களுக்கும் பணி கிடைக்கும் என்ற பெரும் கனவோடு காத்திருக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து வேலைவாய்ப்பு அளிக்க முன்வரவேண்டும். அப்படி என்.எல்.சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கிராம மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.