கொரோனா நிதி வழங்குவதில் மோதல்.. கடலூர் அதிமுகவில் கோஷ்டி தகராறு.. இருவர் வெட்டிக் கொலை
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் கொடுப்பதில், அதிமுகவின் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் தரப்பை சேர்ந்த இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலையாளிகள் 15 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இருதரப்பினரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும், கட்சி தலைமையில் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருவதும், தொடர்கதையாக இருந்து வருகிறது.
மேலும் இவர்கள் இருவருக்கும் இடையேயான சண்டை அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு இடையேயும் அண்மை காலமாக கோஷ்டி பூசலாக வெடித்து வருகிறது. இதனிடையே தற்போது ஒரு தரப்பை சேர்ந்தவரின் ஆதரவாளர்கள் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதிமுகவின் மற்றொரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் பயங்கர ஆயுதங்களை கொண்டு மோதி கொண்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக திருவதிகை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் வீதி, வீதியாக கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது எதிர் தரப்பினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை நோட்டமிட்ட எதிர் தரப்பினர், பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணிகண்டனின் நண்பர் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் லேசான காயமடைந்தார்.
கொலையானவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கோஷ்டி மோதலே கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த பாலு, கருணாகரன், ராமச்சந்திரன் உட்பட 15 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.