வடலூர் வள்ளலார் சன்மார்க்க சபையில் உதயநிதி ஸ்டாலின்... சூடு பிடிக்கும் இரண்டாம் கட்ட பிரச்சாரம்..!
கடலூர்: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளாலார் சன்மார்க்க சத்ய ஞான சபைக்கு சென்றார்.
அங்கு ஏழை எளியோருக்கு உணவு பரிமாறுமாறு சன்மார்க்க சத்ய ஞான சபையினர் கேட்டுக்கொண்டதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் உணவு வழங்கினார்.
எல்லோருக்கும் எல்லாம் என அன்றே சமூக நீதி பேசிய வள்ளலாரை போற்றுவோம் என பெருமிதப்படுத்தி உதயநிதி டிவிட் வெளியிட்டுள்ளார்.
இன்று யார் யாரோ கட்சி தொடங்குகிறார்கள்; கட்சி தொடங்கியவுடன் ஆட்சி என்கிறார்கள் -ஸ்டாலின்
இரண்டாம் கட்டம்
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டத்திலிருந்து தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். கடந்த இரண்டு நாட்களாக கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் வடலூரில் அமைந்துள்ள அருட்பெரும்ஜோதி வள்ளலாரின் சன்மார்க்க சத்ய ஞான சபைக்கும் சென்றார்.
புத்தகம் பரிசு
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த சன்மார்க்க சபையினர் வள்ளலாரின் பெருமைகள் தாங்கிய புத்தகங்களை உதயநிதிக்கு பரிசாக அளித்தனர். அதனை அன்போடு பெற்றுக்கொண்ட அவர் வள்ளலாரை போற்றும் வகையில் சன்மார்க்க சபை செயல்படும் விதம் பற்றி கேட்டறிந்தார். மேலும், எப்போதும் ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக அடுப்பெரியும் பகுதியையும் பார்வையிட்டார்.
உதயநிதி டிவிட்
அவரிடம் ஏழை எளியோருக்கு உணவு பரிமாறுமாறு சன்மார்க்க சபையினர் கேட்டுக்கொண்டதை அடுத்து உணவு வழங்கினார். இதனிடையே இந்த நிகழ்வு குறித்து ட்வீட் வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், ''சாதியிலே மதத்திலே சாயாதீர் என்ற வடலூர் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபைக்கு சென்றேன். அங்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு பரிமாறும் வாய்ப்பை தந்த சபையின் சான்றோருக்கு நன்றி. எல்லோருக்கும் எல்லாம் என அன்றே சமூக நீதி பேசிய வள்ளலாரை போற்றுவோம்.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள்
கடலூர் மாவட்டத்தில் இன்று 3-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் விவசாயிகளை சந்தித்து பேசினார். இதேபோல் திமுகவுக்கு உழைத்த மூத்த முன்னோடிகளை அவர்கள் வீடு தேடிச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.