நெய்வேலி விபத்து... காலாவதியான பாய்லர்கள்... வேல்முருகன் பரபரப்பு புகார்
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி.யில் அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் அங்கு காலாவதியான பாய்லர்கள் பயன்படுத்துவதே என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு காரணமான என்.எல்.சி உயர் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நெய்வேலி பாய்லர் விபத்தில் 6 பேர் பலி- உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி இரங்கல்
பழுப்பு நிலக்கரி
கடலூர் மாவட்டம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷன் (என்எல்சி) இந்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி வேறெங்கும் இல்லாத சிறப்புக்குரியதாகும். இதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி பல்வேறு மாநிலங்களுக்கும் செல்கிறது. தமிழ்நாட்டுக்கு சிறிதளவே கிடைக்கிறது.
உயிர்பலி
காமராஜரால் வந்த இந்த என்எல்சி, அவரது காலத்திற்குப் பிறகு பிரச்சனைகளின் களமாகியுள்ளது. பாய்லர் வெடிப்பு, உயிர்கள் பலி என்பது பிரச்சனைகளின் உச்சகட்டமாகவே ஆகியுள்ளது. கடந்த மே மாதம் 7ந் தேதியன்று என்எல்சியின் இரண்டாவது மின் நிலையத்தில் பாய்லர் வெடித்தது. அப்போது பணியிலிருந்த தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 2 நிரந்தர தொழிலாளர்களும் 6 ஒப்பந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
அதிகரிக்கக்கூடும்
அதே இரண்டாவது மின் நிலையத்தில் இன்று மீண்டும் ஒரு பாய்லர் வெடித்துள்ளது. இது மிகப் பெரிய பாய்லர் ஆகும். அதனால் சம்பவ இடத்திலேயே 4 தொழிலாளர் இறந்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலளர்களிலும் 2 பேர் இறந்துள்ளதாகத் தெரிகிறது. 20 பேருக்குமேல் படுகாயமடைந்துள்ளார்கள். பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்ற அச்சம் மேலும் பயமுறுத்துகிறது.
அநீதி தொடர்கதை
சம்பவ இடத்தில் தொழிலாளர் குடும்பத்தினரையோ, வேறு யாரையுமோ அனுமதிக்காததால் பாதிப்பை துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. விபத்து நடக்கும்போதெல்லாம் இப்படித்தான் ஆகிறது. மேலும், ஒரு சொற்ப தொகையை இழப்பீடாக அறிவித்து இந்தக் கொடூரங்களை முடித்துவிடும் அல்லது மூடிமறைத்துவிடும் அநீதியும் தொடர்கதையாகியுள்ளது.
பரபரப்பு புகார்
பாய்லர் வெடிப்பு, உயிர்கள் பலி என்ற இந்தக் கொடூர சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. காரணம், இந்த பாய்லர்களை நிர்மாணிப்பதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்குமான வேலைகளை வெளிமாநிலத்தவர்களை கொண்டு செய்யப்பட்டு வருவதால்மொழி பிரச்சனை இருப்பதாகத் தெரிகிறது. அந்த நிறுவனத்தின் பொறுப்பில் உள்ள பாய்லர்கள் அனைத்தும் கால அளவைப் பொறுத்தவரையில் காலாவதியானவை.
வலியுறுத்தல்
இன்றைய நவீன தொழில்நுட்ப ரீதிலான பாய்லர்கள் இல்லை அவை. அவற்றின் பயன்பாட்டு கால அளவு முடிந்த நிலையில், அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, நவீன தொழில்நுட்ப ரீதிலான புதிய பாய்லர்களை நிர்மாணிக்காததே பாய்லர் வெடிப்பு தொடர்கதையானதற்குக் காரணம். இதற்கு காரணமான என்.எல்.சி உயர் அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இதைக் கணக்கில் எடுத்து தகுந்த மாற்றங்களைச் செய்யுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.