ஐயா நீங்கள் முதல்வரானவுடனே.. ஸ்டாலினிடம் தைரியமாக கோரிக்கைகளை பட்டியலிட்ட சிறுமி!
விருத்தாசலம்: நீங்கள் முதல்வர் ஆனவுடன் எங்கள் ஊருக்கு இதையெல்லாம் செய்ய வேண்டும் என 4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தனது கோரிக்கைகளை பட்டியலிட்டார்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதத்திற்குள் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். திமுக ஊர் ஊராக சென்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இதில் அந்தந்த ஊர்களில் மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை கேட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்திற்கு சென்றார்.
கை கொடுத்த மக்கள்
அங்கு அவர் பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறுகையில் இந்த கூட்டத்தில் மக்களை எல்லாம் சந்தித்த போது எல்லாரும் கை கொடுத்தார்கள், என் கன்னத்தை கிள்ளினார்கள். கைகளில் நகங்களால் பிராண்டி ஆங்காங்கே சிறு காயங்கள் உள்ளன. நான் இதற்காக வருத்தப்படவில்லை. இதெல்லாம் அன்பால் செய்தது, பாசத்தால் செய்தது.
மகிழ்ச்சி
இந்த அன்பை மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். அப்போது இடையில் ஒரு சிறுமி ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் என அழைத்தார். உடனே என்னம்மா என்றேன், நான் உங்களுடன் பேச வேண்டும் என்றார், சரி பேசு என்றேன், அதற்கு அவர் நான் மைக்கில் பேச வேண்டும் என்றார். இப்போது அந்த சிறுமி சஞ்சனாவை பேச அழைக்கிறேன் என தெரிவித்த ஸ்டாலின் அந்த சிறுமியிடம் மைக்கை கொடுக்கச் சொன்னார்.
விருத்தாசலம் மாவட்டம்
அப்போது அந்த சிறுமி பேசுகையில் இத்தனை கூட்டத்திற்கு மத்தியில் என்னை பேச வைத்ததற்கு நன்றி ஐயா என கூறி தனது பேச்சை தொடர்ந்தார். அவர் கூறுகையில் நீங்கள் முதல்வரானவுடன் எங்கள் விருத்தாசலத்தை மாவட்டமாக ஆக்கி கொடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை
விருத்தாசலத்தை விட சின்ன சின்ன ஊர் எல்லாம் மாவட்டமாக ஆகிவிட்டது. எல்லா வசதிகளும் உள்ள நிலையிலும் எங்கள் ஊர் மாவட்டமாக ஆகவில்லை. நீங்கள் அதை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். இன்னொரு கோரிக்கையும் இருக்கிறது. எங்கள் ஊரில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கொடுங்கள்.
மருத்துவமனை
விருத்தாசலத்தை சுற்றியுள்ள மக்களுக்கு ஒரே மருத்துவமனை இதுதான். இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதே இல்லை. விபத்து ஏற்பட்டாலோ, பிரசவ வலி ஏற்பட்டாலோ அந்த மருத்துவமனையில் வசதிகள் இல்லை என கூறி வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். அந்த மருத்துவமனைகளுக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் இறக்க நேரிடுகிறது. இதனால் இந்த மருத்துவமனையை நீங்கள் தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் அந்த சிறுமி.