என்.எல்.சி.யில் அடிக்கடி பாய்லர் வெடிப்பது ஏன்...? எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரபரப்பு புகார்
கடலூர்: என்.எல்.சி.யில் பாய்லர் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனம் முறையாக மேற்கொள்ளாததே அங்கு அடிக்கடி விபத்து ஏற்படக் காரணம் என திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மிகவும் மெத்தனப் போக்குடன் நடந்துகொள்வதாக அவர் சாடியுள்ளார்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் என்.எல்.சி.யில் இனி உயிரிழப்பு ஏற்பட்டால், அதனை திமுக வேடிக்கை பார்க்காது என எச்சரித்துள்ளார்.
முதலமைச்சருக்கு 'பால் ஹாரிஸ் ஃபெல்லோ' விருது... கட்சியினர் வாழ்த்துமழையால் கரைபுரளும் உற்சாகம்
உயிரிழப்புகள்
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையான இடத்தில் இருப்பது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். இதன் சுருக்கமாக தான் என்.எல்.சி. என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்திற்கு பெருமை தேடிதரக்கூடிய வகையில் செயல்படும் இந்நிறுவனம் அண்மைக்காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அடிக்கடி பாய்லர் வெடிப்பு, தீ விபத்து, என பல விபத்துக்கள் அங்கு நிகழ்வதால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.
உயிரிழப்பு
இதனிடையே அங்கு அண்மையில் ஏற்பட்ட இரண்டு விபத்துக்களில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் தீக்காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துகளுக்கு என்.எல்.சி.நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பாய்லர் பராமரிப்பு பணிகளை மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்திடம் கொடுக்காமல், தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் கேட்பாரின்றி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதுகாப்பை உறுதி செய்க
என்.எல்.சி.யில் அதிகாரிகளின் அஜாக்கிரதையால் இனி விபத்து ஏற்பட்டு அதன்மூலம் உயிரிழப்புகள் தொடர்ந்தால் திமுக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், தொழிலாளர்களின் பாதுகாப்பை என்.எல்.சி. நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கடலூர் மாவட்டத்தின் இயற்கை வளங்களை உறிஞ்சிவிட்டு இந்த மாவட்ட வளர்ச்சிக்காக CSR FUNDஐ என்.எல்.சி.நிர்வாகம் செலவழிப்பதில்லை என்றும் அந்த நிதியை வட இந்தியாவுக்கு அனுப்புவதாகவும் புகார் கூறியுள்ளார்.
கேலிக்கூத்து
இப்படி இங்கே லாபம் ஈட்டும் பணத்தை கடலூர் மாவட்ட வளர்ச்சிக்கும், தமிழக மக்களுக்கும் கொடுக்க மனம் வராதது வேதனையளிக்கிறது என்றும், உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் கூட கேலிக்கூத்தான முடிவுகளை என்.எல்.சி. நிர்வாகம் எடுத்துள்ளதாகவும் சாடியுள்ளார். இதனிடையே முதலமைச்சர் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை கைவிட வேண்டும்