பேச மறுத்தாள்... வாட்ஸ் அப்பில் பிளாக் செய்தாள்... கத்தியால் குத்தி கொன்றேன் - ஆகாஷ் வாக்குமூலம்
செல்போனில் பேச மறுத்த காரணத்தால் திலகவதியை கொலை செய்ததாக விருத்தாச்சலம் அருகே கல்லூரி மாணவியை கொன்ற கொலையாளி ஆகாஷ் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
விருத்தாச்சலம் / கடலூர்: பள்ளியில் படிக்கும் போது பழகியவள் இப்போது பேச மறுக்கிறாள். பலமுறை முயன்றும் முடியாமல் போகவே கத்தியால் குத்தி கொன்று விட்டேன் என்று விருத்தாச்சலம் அருகே கல்லூரி மாணவியை கொன்ற கொலையாளி ஆகாஷ் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி கொளஞ்சியின் மகள் திலகவதி. கட்டிடத்தொழில் செய்து வரும் இந்த தம்பதியரின் மகள் திலகவதி. தனியார் கல்லூரியில் பிஏ ஆங்கில இலக்கியம் படித்து வந்த திலகவதியை ஆகாஷ் என்ற கூலி தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டான்.
விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் அவனை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரிக்கவே திலகவதியை கொன்றதை ஒத்துக்கொண்டான். நாடகக் காதல் என்றும், காதல் தகராறில் கொலை என்றும் பல ஊடகங்களிலும் செய்திகள் பரவின.
ஆணவக்கொலையா?
தங்கள் மகன் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவன் அப்பாவி என்றும் ஆகாஷ் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திலகவதியுடன் பழகியதால் ஆத்திரம் அடைந்து மாணவி திலகவதியின் குடும்பத்தினரே மாணவியை ஆணவ கொலை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாக ஆகாஷின் தந்தை அன்பழகன் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
கொலையை ஒத்துக்கொண்ட ஆகாஷ்
திலகவதியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்ததை ஆகாஷே ஒப்புக் கொண்ட நிலையில் இந்த கொலை வழக்கில் ஜாதியை புகுத்தி ஆகாஷின் தந்தை விசாரணையை திசைதிருப்ப முயல்வதாக குற்றஞ்சாட்டி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விசாரணையின் போது கைதான ஆகாஷ் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளித்த வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ஆகாஷ் வாக்குமூலம்
ஆகாஷ் தனது வாக்குமூலத்தில் தன்னிடம் பேச மறுத்த காரணத்தால் குத்தி கொன்றதாக கூறியுள்ளான். பள்ளியில் படிக்கும் போதே தன்னுடன் பேசி பழகிய திலகவதி தற்போது பேசுவதில்லை என்றும் கல்லூரியில் படிக்கப் போனதால் கூலி வேலை செய்து வந்த தன்னை ஒதுக்கியதாகவும் கூறியிருக்கிறான்.
நம்பரை பிளாக் செய்த திலகவதி
திலகவதியை தன்னால் மறக்க முடியவில்லை அவளிடம் தொடர்ந்து பேச முயன்றேன். ஆனாலும் முடியவில்லை. செல்போனில் பேச முயன்றேன் முடியவில்லை. என் நம்பரை பிளாக் செய்து விட்டாள். நேரிலும் பேச முயன்றேன் தவிர்த்து விட்டாள். என்னால் தாங்க முடியவில்லை. கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த அவளை தொடர்ந்து வந்தேன். வீட்டில் யாரும் இல்லை பேசிக்கொண்டிருந்த போதே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலகவதியின் வயிற்றில் குத்தினேன். அவள் சரியவே நான் பயந்து ஓடி வந்து விட்டேன். வெளியூர் தப்பி செல்வதற்காக பஸ் ஏற முயன்ற போது போலீசில் சிக்கிக்கொண்டேன் என்று ஆகாஷ் கூறியுள்ளான்.
கலைந்து போன கனவு
படிக்கும் போது நட்பாக பழகினாலும் படிப்பில் நாட்டமில்லாமல் ஊர் சுற்றிய ஆகாஷ் உடனான நட்பை நாளடைவில் முறித்துக்கொண்டார் திலகவதி. வாட்ஸ் அப்பிலும் பிளாக் செய்து விட்டார். இதுவே ஆகாஷ் மனதில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பட்டதாரியாக வேண்டும் என்ற கனவுகளுடன் கல்லூரிக்கு சென்ற மாணவி திலகவதி, ஒருதலை காதல் மயக்கத்தில் இருந்த கொடூரனின் கத்திக்குத்துக்கு பலியான சம்பவம் கடலூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தொடரும் ஒருதலைக்காதல் கொலைகளை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.