என் புருஷன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிச்சுட்டார்.. டிக்டாக் விபரீதம்.. பெண் குமுறல்!
Recommended Video
கடலூர்: டிக் டாக் செயலி மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
டிக் டாக் செயலி மூலம் தமிழகத்தில் பல குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில், தற்போது பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு பகுதியில் உள்ள ஒரு குடும்பம் சீரழிந்துள்ளது.
பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு பகுதியை சேர்ந்த ராஜசேகருக்கும், விசூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுகன்யாவிற்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு மூன்று வயதில் தர்ணிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது கணவர் தன்னுடன் தொடர்ந்து சண்டை போடுவதும், வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்வதுமாக இருந்ததால், சுகன்யாவிற்கு தனது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்துள்ளார். தனது கணவர் டிக் டாக் செயலி மூலம் பல பெண்களிடம் பழக்கம் ஏற்பட்டு, பின்பு அந்த பெண்களை திருமணம் செய்து அவர்களது வாழ்க்கையை சீரழிப்பதும், அதன்பின்பு அவர்கள் தொடர்பைத் துண்டித்து விட்டு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து சுகன்யா தன்னுடைய கணவர் ராஜசேகர் மீது காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுகொண்ட போலீசார், ராஜசேகரை அழைத்து எச்சரிக்கை விடுத்து, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். இதன்பிறகு சில நாட்கள் திருந்தியிருந்த ராஜசேகர், பின்னர் மீண்டும் தனது காதல் லீலைகளை ஆரம்பித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா, மீண்டும் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்நிலையத்தில் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜசேகர் டிக் டாக் செயலி மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கவிநயா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ராஜசேகரும் - கவிநயாவும் சினிமா பாடல் ஒன்றுக்கு நடித்திருக்கும், டிக் டாக் வீடியோ வெளியானதை கண்ட சுகன்யா மேலும் அதிர்ச்சியடைந்தார். இதனால் தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், பல பெண்களை சீரழித்து வரும் தனது கணவர் ராஜசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டிக் டாக் செயலியை தடை செய்ய கோரியும் வலியுறுத்தியுள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.