காதலனுக்கு கல்யாணம்.. மனம் உடைந்த பெண் சிறை வார்டன்.. துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை!
திருச்சியில் பெண்கள் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர்: காதலனுக்கு வேறு பெண்ணுடன் நாளை மறுதினம் கல்யாணம் நடக்க உள்ளதால், மனம் உடைந்த பெண் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் காவலர்கள் தற்கொலைகள் தொடர்ந்து வருவது பெரும் அதிர்ச்சி நிறைந்த கவலையை அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் செந்தமிழ் செல்வி. திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.
நேற்றிரவு அவருக்கு நைட் டியூட்டி. ஆனால் நேரமாகியும் இன்னும் டியூட்டிக்கு செந்தமிழ் செல்வி வராததால் போன் செய்து பார்த்தார்கள், ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. அறிந்த சக காவலர்கள், காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கே சென்று பார்த்தனர்.
பெட்ரூமில் தற்கொலை
அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. பல முறை கதவை தட்டிய போதும் திறக்கவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், திருச்சி கே.கே.நகர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசாரும் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, செந்தமிழ் செல்வி பெட்ரூமில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார்.
விசாரணை ஆரம்பம்
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் அவரது பெற்றோருக்கு தகவலை அளித்துவிட்டு, தங்கள் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது இந்த தற்கொலை ஒரு காதல் விவகாரம் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.
காதல் தோல்வி?
செந்தமிழ்செல்விக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வரும் போலீஸ் ஒருவரை காதலித்துள்ளார். இருவருமே நெருங்கி பழகி வந்திருக்கிறார்கள். ஆனால் இருவருக்குள்ளும் ஏதோ மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்துவிட்டதாகவும், வரும் 6-ம் தேதி அதாவது நாளை மறுநாள் காதலனுக்கு கல்யாணம் நடக்க உள்ளதும் தெரியவந்துள்ளது.
அதிர்ந்துள்ள காவல்துறை
காதலனுக்கு இன்னொரு கல்யாணம் நடக்க உள்ளதால் செந்தமிழ்செல்வி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேலையில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இருக்குமா என்ற பல்வேறு கோணங்களில் அடுத்தடுத்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தடுத்த தினங்களில் தமிழக காவல்துறை மற்றும் சிறைத்துறைகளில் பணியாற்றும் காவலர்கள் தற்கொலைகளால் அதிர்ந்து கிடக்கிறது தமிழக போலீஸ் வட்டாரங்கள்.
உறவினர்கள் முழக்கம்
இதனிடையே உறவினர்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். செந்தமிழ்ச்செல்வியின் தற்கொலைக்கு காதலனே காரணம் என்றும் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி விட்டதால், அவர் வழக்கு பதிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி முழக்கமிட்டனர். ஆனால், போலீசார் எங்கே சம்பவம் நடந்ததோ அங்கு சென்று புகார் கொடுங்கள் என்று அனுப்பி வைத்தனர்.
நகர மாட்டோம்
இதனையடுத்து, திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்க உறவினர்கள் சென்றனர். ஆனால் போலீசார் புகாரை ஏற்று கொள்ளவில்லை என தெரிகிறது. அதனால் பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கடலூர்- புதுவை சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். பெண்ணின் காதலனை கைது செய்யும் வரை நகர மாட்டோம் என்று உறுதியாக கூறினர்.
போலீசார் குவிப்பு
இதனால் உடனடியாக அதிவிரைவு படை போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருக்கிறார்கள்.