கந்து வட்டி தகராறு.. தந்தை கண் முன்னே மகன் வெட்டிக் கொலை.. தஞ்சையில் பயங்கரம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் கந்துவட்டி தகராறில் தந்தை கண் முன்னே மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பத்துக்கட்டு தெருவில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன் (53). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் (22).
இவர் தந்தைக்கு உதவியாக கடையை பார்த்து வந்தார். இந்த நிலையில் குடும்பச் செலவு மற்றும் வியாபார நிமித்தமாகவும் பாமக முன்னாள் நிர்வாகி ஒருவரிடம் ரூ 7 லட்சம் வரை சிவசுப்பிரமணியன் கடன் வாங்கியிருந்தார்.
ஜீப்பிலிருந்து குதித்து.. போலீஸாருக்கு கத்திக் குத்து.. சேலம் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை
தொல்லை
ஆனால் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியாமல் வட்டியாகவே பல லட்சங்களை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்த பாமக முன்னாள் நிர்வாகியோ கடனை திருப்பி செலுத்துமாறு தொல்லை கொடுத்துள்ளார்.
வாய்த்தகராறு
அதற்கு அருண், எங்களிடம் கந்து வட்டி வாங்கி அசலுக்கு மேல் வட்டியை வசூலித்து விட்டீர்கள். இனிமேல் எங்களால் கடன் தொகையை செலுத்த முடியாது என அருண் கூறிவிட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல்
இந்த நிலையில் நேற்றிரவு மளிகை கடையில் தனது தந்தை சிவசுப்பிரமணியத்துடன் அருண் வேலை செய்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து அருணை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.
இறப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசுப்பிரமணியன் கூச்சல் போட்டுள்ளார். அப்போது அந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிய அருணை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அருண் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள், கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.