இருக்கவே இருக்கு சைக்கிள்.. சமூக இடைவெளிக்கு சூப்பர் சாய்ஸ்!
இருக்கவே இருக்கு சைக்கிள்.. சமூக இடைவெளிக்கு சூப்பர் சாய்ஸ்!
கொரோனாவையொட்டி இப்போது பஸ் இல்லை, ரயில் இல்லை.. காரணம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது என்பதால். இந்த நேரத்தில்தான் நாம் நமது பழைய பழக்கங்களை கையில் எடுக்க வேண்டியுள்ளது.
முடிந்தவரை நடக்கலாம்.. முடியாதபோது இருக்கவே இருக்கிறது சைக்கிள்.. உடலுக்கும் நல்லது.. சமூக இடைவெளியையும் அருமையாக பின்பற்றலாம்.
வாகன வசதிகள் வந்த பிறகு அடியோடு மறக்கப்பட்ட ஒரு அருமையான வாகனம் சைக்கிள். வெளிநாடுகளில் சைக்கிளை எல்லோரும் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். காரணம் உடற்பயிற்சியாக இருக்கிறது என்பதால்.. நாமும் அப்படி மாறலாமே.. கொரோனா காலத்தில் இது பொருத்தமான மாற்றமாகவும் இருக்குமே..
மறந்து போய்ட்டோமே
சைக்கிள் மோட்டார் வாகனங்களின் வருகையால் மக்களால் மறக்கப்பட்ட ஓர் வாகனம். இன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் மட்டும் தான் சைக்கிள் பயன்படுகிறது. சிறுவயதில் வாடகை சைக்கிளுக்காக வீட்டில் பெற்றவர்களுக்கு தவி செய்து சம்பாதிப்பதே தனி சுகம் தான். நம்பர் பார்த்து கலர் பார்த்து சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் முழுக்க வலம் வரும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை.
பின் சீட்டில் அம்மாவும் குழந்தையும்
சைக்கிள் சீட்டின் முன்புறத்தில் அமர்ந்துக்கொண்டு தந்தை ஓட்ட தாய் பின்னால் அமர அக்குழந்தைக்கு ஏற்படும் சந்தோஷமே தனி தான்.உண்மையில் நாம் நேரமின்மை காரணமாக சைக்கிள் பயன்பாட்டைக் குறைத்து விட்டோம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் நாள்முழுவதும் கணினி முன்னே அமர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் அவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கிறது.
வெயிட் குறைக்க சாய்ஸ்
பி்ன் எடையைக் குறைக்க வீட்டில் சைக்ளிங் செய்கிறார்கள். நிற்கும் சைக்கிளை மிதிப்பதை விட அதை ஓட விட்டால் இன்னும் மனம் நிறைவாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்கள் சைக்கிளைப் பயன்படுத்தலாம். வீட்டில் அருகிலிருக்கும் காய்கறி மற்றும் மளிகைக்கடைக்குச் செல்வதற்கு அருகிலுள்ள கோயிலுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தலாம். சைக்கிள் ஓட்டுவதால் உடலில் உள்ள தேவையில்லாதக் கொழுப்புக் கரைகிறது. இதனால் சர்க்கரை நோய் இரத்தக்கொதிப்பு வராமல் தடுக்கிறது.
அருமையான வரம்
சைக்கிள் இந்தக் கொரோனா காலத்தில் ஒரு வரம். சைக்கிளை ஓட்டிக் கொண்டு வெளிமாநிலங்களுக்கே செல்லும் போது நம்மால் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல முடியாதா. சைக்கிளை இந்த இக்கட்டான சூழலில் பயன்படுத்தினால் கொரோனாவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதே நேரத்தில் உடலுக்கு உடற்பயிற்சியும் கூட. சைக்கிளை ஓட்டுங்க அப்புறம் பாருங்க கொரோனா கிட்டயே வராது.