இதை படிக்கும்போது யாராவது உங்க நினைவுக்கு வந்தால் "கம்பெனி" பொறுப்பல்ல!
"முடிவு" என்பது எது..? ஆரம்பத்தின் இறுதிதான் முடிவு.. பலருக்கு முடிவு எடுப்பதில் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் இருக்கும்.. சிலருக்கு முடியும் வரை முடிவெடுக்கவே முடியாது.. அது முடியாத ஒரு தொடர் கதையாக.. முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கும்.. கடைசி வரை முடிவும் தெரியாது.. முடியவும் முடியாது.
முடிவில்லாத நீண்ட பயணங்களாக பலரது குழப்பங்கள் நீடித்தபடி இருக்கும்.. முடிவை எட்ட முடியாமல் அல்லது முடிவெடுக்க முடியாமல்... பயணங்களுக்கு முடிவு இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் முடிவெடுப்பதில் ஏதாவது முடிவெடுத்துதானே ஆக வேண்டும்.. அதுதான் பலருக்கு முடியாத பயணமாக மாறிப் போய் விடுகிறது!
"இந்த வருடம் நாம கோவா போறோம்" என்று சிலர் முடிவெடுப்பார்கள்.. ஆனால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் முடிவே இல்லாமல் வருடா வருடம் நடந்து கொண்டே இருக்கும். அது எப்ப முடிவுக்கு வரும் என்று யாருக்குமே தெரியாது.. அடுத்த வாரம் அதுகுறித்துப் பேசி முடிவெடுப்போம் என்று ஒரு முடிவெடுத்து அறிவிப்பார்கள்.. அடுத்த வாரம் அதேபோல கூடவும் செய்வார்கள்.. ஆனால் அந்த கூட்டத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை.. எந்த உருப்படியான விவாதமும் நடக்காமல் கடைசியில் முடிவே எடுக்காமல் அந்த கூட்டம் முடியும்..!
"நாம எப்பப்பா நிஜமாவே கோவா போவோம்" என்ற கேள்வி.. முடிவே தெரியாத கேள்வியாக தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஒரு பிரச்சினை வருகிறது.. அதை ஆரம்பத்திலேயே சிலர் முடித்து விடுவார்கள்.. கரெக்டாக முடிவெடுப்பார்கள்.. ஆரம்பத்திலேயே சரியாக கணிப்பது அவர்களின் இயல்பாக இருக்கும்.. இதனால் முடிவெடுப்பதும் இலகுவாக அமையும்.. ஆனால் சிலர் பிரச்சினையை வளர விட்டு வேடிக்கை பார்த்து விட்டு கடைசியில் முடிவுக்கு வர முயற்சிப்பார்கள்.. ஆனால் முடிவெடுக்க முடியாமல் திணறிப் போவார்கள்.. அதுகுறித்து முடிவெடுக்க அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி.. அந்தக் கூட்டங்கள்தான் முடியுமே தவிர.. பிரச்சினை முடியவே முடியாது.
மனிதனால் முடியாத ஒன்று என்று எதுவுமே இல்லை என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் முடிவு எடுப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல.. அதுதான் உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான காரியம்.. நம்மை ஒருவர் பாராட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.. அது மனசுக்கு சுகமாக இருக்கும்.. "இன்னும் நாலு பிட்டை சேர்த்துப் போடுங்க" என்று ரசிக்க ஆரம்பிப்போம்.. அது முடியாமல் தொடரும்.. அதை முடிக்க மனம் வராமல் தொடர வைக்கத் தோன்றும்.. அதுவும் தொடர ஆரம்பிக்கும்.. பற்றிப் படரவும் ஆரம்பிக்கும்.. முடிவே இல்லாமல் நீள ஆரம்பிக்கும்.
அப்படி முடிவே இல்லாமல் செல்லும் அது.. ஒரு நாள் நம் கழுத்தை சுற்றி ... பாம்பு போல வளைத்து நிற்கும்.. அப்போதுதான் நமக்கு அடடா இதை முடிக்காம விட்டுட்டோமே என்று தோன்றும்.. அப்போதுதான் நாம் தாமதித்து விட்டோமோ என்று எண்ணவும் தோன்றும்.. அப்படித் தோன்றிய வேகத்தில் அதை முடிக்க களம் இறங்குவோம்.. ஆனால் சுற்றிலும் இருக்கும் சிலர்.. எதுக்கு இப்பப் போயி.. அது அப்படியே இருக்கட்டும்.. நாங்க பாத்துக்குறோம் என்று சொல்லி தூபம் போட்டு முடிய விடாமல் தொடர விரும்புவார்கள்.
நாம, இப்பவாச்சும் சுதாரிச்சு அந்த பாம்பை கழுத்திலிருந்து மெல்ல அகற்றி விட்டு முற்றும் போட முயலலாம்... ஆனால் பாவி மனசு கேக்குதா?.. இல்லையே.. எதையாவது மனசுல நினைச்சுக்கிட்டு முடிய விடாமல் தொடருவதற்கு அதுவாகவே இடம் கொடுத்து விடும்.. விளைவு.. நாம் முடிவெடுக்க முடிவு செய்த விஷயம்.. முடியாமல் தொடரும்... முடிவே இல்லாமல் மீண்டும் அது நீளும்.
சில காலம்தான் அதுவும் தொடர முடியும்.. பிறகு நமக்கே சலித்துப் போய் அட ச்சே இதை முடிச்சு விட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்ப்பா என்ற எண்ணம் வரும் பாருங்க.. அங்க ஆரம்பிக்கும் அந்த முடிவில்லா தொடர் கதையின் மறு சுழற்சி.. "இப்ப முடிவெடுக்கிறோம்" என்று மனசுக்குத் தோன்றும்.. கூடி கூடி பேசவும் செய்வோம்.. ஆனால் கடைசி வரை முடிவெடுக்க முடியாது.. காரணம் முடிவெடுக்க முடியாத அளவுக்கு அந்த முடிவின் ஆரம்பம் முதல் இறுதி வரை பின்னிப் பிணைந்திருக்கும் சிக்கல்கள்.. ஆரம்பத்திலேயே முடிக்காமல் விட்டதால் வந்த சிக்கல்கள்தான் இவை!
இந்த சிக்கல்களின் ஆரம்பத்தையும் நாம் கவனித்திருக்க மாட்டோம். அது எங்கு போய் முடியும் என்பதும் நமக்குத் தெரியாது... அது தொடர்வதும், முடிவதும் கூட நாம் எடுக்கப் போகும் அந்த முக்கிய முடிவில்தான் தொடக்கத்திலிருந்தே இருந்திருக்கும்.. ஆனால் நாமதான் ஆரம்பத்திலிருந்தே அந்த முடிவை எடுக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து விட்டோமே!.. இப்போது முடிவெடுத்து என்ன பிரயோஜனம் என்ற நிலை அப்போது ஏற்பட்டிருக்கும்.
சரி இதெல்லாம் வேண்டாம்.. முடிச்சு விட்ருவோம்.. என்று ஒரு வழியாக மனசுக்குள் முடிவெடுத்து.. நிஜத்திலும் அந்த முடிவை எடுக்கலாம் என்றும் நாம் தெம்போடு களத்தில் இறங்கி முடிவெடுப்பது தொடர்பான ஆலோசனைக்காக நலம் விரும்பிகள், நட்புகள், உற்றார் உறவினர்களைக் கூப்பிட்டு அமர்ந்து பேசி முடிவெடுக்க முயலும்போது.. "என்ன அவசரம்.. இதுகுறித்து பிறகு ஆலோசித்து முடிவெடுப்போமே"னு... மனசில் தோன்றும் பாருங்க ஒரு எண்ணம்!!
... டிவியில் "குடும்பம் ஒரு கதம்பம்".. செம சவுண்டாக ஓடிக் கொண்டிருந்தது விசுவின் வசனம்!