10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி பைனலில் டெல்லி
டெல்லி: சர்வதேசப் போட்டிகளுக்கு வீரர்களை உருவாக்கும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலுக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி நுழைந்துள்ளது.
முதல்தர போட்டியான ரஞ்சிக் கோப்பை கிரி்க்கெட் போட்டி, 1934 முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21 மாநிலங்கள் உள்பட, 28 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.
பல சுற்றுகள் நடந்துள்ள போட்டி பைனலை எட்டியுள்ளது. ஒரு அரை இறுதியில் டெல்லி்யும் பெங்கால் அணியும் மோதின. இதில் இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் கவுதம் கம்பீரின் 42வது முதல்தர கிரிக்கெட் சதம் அடிக்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சாய்னி 7 விக்கெட் வீழ்த்த, டெல்லி அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் பெங்காலை வென்றது.
இதுவரை 14 முறை ரஞ்சி பைனலில் விளையாடியுள்ள டெல்லி அணி, ஏழு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடைசியாக, 2007ல் பைனலுக்கு நுழைந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பைனலுக்கு டெல்லி அணி தகுதி பெற்றுள்ளது.
கர்நாடகாவுக்கு எதிரான மற்றொரு அரை இறுதியில் விதர்பா அணி கடும் சவால் கொடுத்து வருகிறது. விதர்பா முதல் இன்னிங்சில் 185 ரன்கள் எடுத்தது. கர்நாடகா, 301 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை முடிவு செய்தது. தொடர்ந்து ஆடி வரும் விதர்பா இரண்டாவது இன்னிங்சில் 4 விகெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் விதர்பா 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.