முருகனோட ஆசைக்கு ஒரு அளவே இல்லையா.. இப்படியே போனா எப்படி.. நடக்கிற காரியமா இது..!
முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும் என்று முருகன் கூறியுள்ளார்
சென்னை: அதெப்படி அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்? ஆசைப்படறதுக்கும் முருகனுக்கு ஒரு அளவு வேணாமா? என்ற கருத்துக்கள் மேலோட்டமாக எழுந்து வருகின்றன.
மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தாமரை தடாகம் ஆபீஸ் திறப்பு விழா சென்னையில் உள்ள சூளையில் நேற்று நடந்தது.. இதில் கலந்து கொண்ட மாநில பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுக, பாஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.
முருகனின் இந்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.. வேறு எந்த கட்சியும் கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியாது.. அதேபோன்று எங்கள் தலைமையிலான கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் தற்போதைய தமிழக முதல்வர் தான்" என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.
முருகன் சொன்ன இதே கருத்தை ஏற்கனவே, பொன்.ராதாகிருஷ்ணனும், வானதி சீனிவாசனும் கூறியிருந்தனர்.. அப்போதே இதுகுறித்து அதிமுக தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்திருந்தது.. இப்போது தொடர்ந்து முருகன் அதே கருத்தை சொல்லி வருவது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "பாஜக எந்த தைரியத்தில் இதை சொல்கிறது என்று தெரியவில்லை.. வழக்கமாக கூட்டணி தலைமைதான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும்.. கூட்டணி தலைமை தரும் சீட்டை பெற்று கொண்டு, ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிடுவதுதான் கடந்த கால அரசியலில் இருந்த நடைமுறை.. அப்படி இருக்கும் போது, முதல்வர் வேட்பாளரை கூட்டணியில் ஒரு கட்சி முடிவு செய்ய முடியாது.
அதுவும் இல்லாமல் இதுவரை நோட்டாவை சந்தித்து வந்த கட்சி எந்த அளவுக்கு இப்போது வளர்ந்துள்ளது, செல்வாக்கு தமிழகத்தில் பெருகி உள்ளது என்பதைகூட ஆராயாமல், இப்படி, அதிமுக எடுத்த முடிவை மாற்றி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.. பிரபலங்களை கட்சிக்குள் உள்ளே கொண்டு வருவதால் மட்டும் ஒரு கட்சி வளர்ந்து விடாது.
திராவிட கட்சிகளால்தான் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது என்று பாஜக நினைக்கிறது.. பாஜகவுடன் உறவு வைத்ததால்தான் செல்வாக்கு குறைந்துவிட்டது என்று அதிமுக நினைக்கிறது. இப்போது பல விஷயங்களில் இவர்களுக்குள் புகைச்சல் உள்ளது.. அதிமுகவோடு சம பலத்தோடு இருப்பது மாதிரி பாஜக தன்னை காட்டி கொள்ள முயல்வதாகவே தெரிகிறது.
ஏற்கனவே எடப்பாடியார்தான் முதல்வர் என்று தெள்ளத்தெள்ளவாக அதிமுக சொல்லிவிட்ட பிறகு, மறுபடியும் மறுபடியும் இப்படி ஒரே விஷயத்தில் பாஜக முரண்டு பிடிப்பது எதற்காக என்று தெரியவில்லை.. ஒருவேளை தொடர்ந்து இப்படி பேசினால் வேறு வழியில்லாமல் அதிமுக பணிந்துவிடும் என்பதாலோ அல்லது, தனித்து போட்டியிட பாஜகவே இப்படி முயல்கிறதா என்று தெரியவில்லை" என்றனர்.