'யானை புக்க புலம் போல' பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மொத்தமாக விற்கும் மத்திய அரசு!
டெல்லி: பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யானை புக்க புலம் போல என்கிற புறநானூற்று பாடலை மேற்கொள்காட்டி பேசினார். அந்த புறநானூற்றுப் பாடல் வரிகளில் வரும் 'யானை புக்க புலம் போல' என்பதற்கு உதாரணமாக தேசத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ1.05 லட்சம் கோடி நிதி திரட்டப் போகிறதாம் மத்திய அரசு.
லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது வரி வசூலிப்பது குறித்த புறநானூற்றுப் பாடல் வரிகளை அவர் மேற்கோள் காட்டினார்.
சங்க காலப் புலவரான பிசிராந்தையார், அதிக வரி வசூலித்த பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுறுத்தும் பாடல் வரிகளைத்தான் நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டி பேசினார். இதற்காக லோக்சபாவில் பலத்த கைதட்டலும் நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்தது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டின் அம்சங்களைப் பார்க்கும் போது அவர் சுட்டிக்காட்டிய புறநானூற்றுப் பாடல் வரியில் இடம்பெற்றுள்ள 'யானை புக்க புலம் போல' என்கிற வரிகள் அவருக்கே பொருந்தத்தான் செய்கிறது. அதாவது அதிக வரி வசூலித்தால் யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் அவன் நாடும் அழியும் என்பதுதான் இந்த பாடலின் சாரம்சம்.
தற்போதைய பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை ரூ1.05 லட்சம் கோடிக்கு விற்று நிதி திரட்டப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு அதிகமாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஊடகம், இன்சூரன்ஸ், விமானத்துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்ய ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் எரிமலையாக வெடித்து கொண்டிருக்கிறது.
தற்போது யானை புக்க புலம் போல, ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து ரூ1.05 லட்சம் கோடி நிதி திரட்டுவதாக அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் சேலம் இரும்பாலையில் பணியாற்றும் 2,500 பணியாளர்கள் உட்பட பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி இருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்பது தொழிற்சங்கத்தினரின் குற்றச்சாட்டு.