கோவிட் 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி
டெல்லி: கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி நிகழ்வின் முதல் நாளில், 1.46 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் நேற்று (மார்ச் 1) முதல் தொடங்கியது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது.
மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி, தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு ரூ.250 வரை கட்டணம் வசூலிக்க முடியும். தடுப்பூசி மையத்தின் பயனாளிகள் கட்டணமாக ரூ. 150, தடுப்பூசி சேமிப்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நபருக்கு ரூ.100 வரை வசூலிக்க முடியும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசியானது இலவசமாக கிடைக்கும்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள Co-WIN Appஐ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக அவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் பயனாளிகள் தாங்களாகவே 'கோ-வின் 2.0' இணையதளத்திலும், 'ஆரோக்கிய சேது' செயலியிலும் முன்பதிவு செய்யலாம்.
இந்நிலையில் இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி நிகழ்வில், சுமார் 25 லட்சம் பதிவு செய்திருக்கின்றனர். திங்கட் கிழமை வெளியான புள்ளிவிவரங்களின்படி, முதல் நாளில் சுமார் 1.46 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல் நாள் பதிவுசெய்த 25 லட்சம் பயனாளிகளில், 24.5 லட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் சுகாதார மற்றும் முன்னணி கள ஊழியர்கள். குறிப்பாக, சுமார் 6.44 லட்சம் பேர் மூத்த குடிமக்கள்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், 60 வயதுக்கு மேற்பட்ட 1.28 லட்சம் பயனாளிகளும், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 18,850 பயனாளிகளும் திங்களன்று கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றதாக அமைச்சகம் கூறியுள்ளது.
திங்கள்கிழமை இரவு 7 மணி வரை 4,27,072 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில், 3,25,485 பயனாளிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டதோடு, 1,01,587 சுகாதாரப் பணியாளர்கள் தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.