பாஜகவின் உபி.யில் ஓராண்டில் 400 கைதிகள் மரணம்- லாக்கப் சாவுகளில் மபி-க்கு பின் தமிழகம், குஜராத் டாப்
டெல்லி: போலீஸ் லாக்கப் மரணங்களில் இந்திய அளவில் மத்திய பிரதேசம் முதலிடத்திலும் தமிழகம், குஜராத் மாநிலங்கள் 2-வது இடத்திலும் உள்ளன.
நாடாளுமன்றத்தில் போலீஸ் லாக்கப் மரணங்கள், சிறைக் காவல் மரணங்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்தது. 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடப்பாண்டு மார்ச் 31-ந் தேதி வரை நாடு முழுவதும் நிகழ்ந்த போலீஸ் கஸ்டடி மற்றும் சிறைக்காவல் மரணங்கள் எண்ணிக்கை 1,697.
இந்தி, ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழிகள்.. வைகோ கேள்விக்கு மத்திய அரசு திட்டவட்ட பதில்
உபி-யில்தான் அதிகம்
இதில் சிறைகளில் 1,584 பேரும் போலீஸ் லாக்கப்புகளில் 113 பேரும் இறந்துள்ளனர். இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த ஓராண்டில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 400 பேர் சிறைகளில் மாண்டு போயுள்ளனர். 2-வது இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது. இம்மாநிலத்தில் ஓராண்டில் மட்டும் 143 சிறைவாசிகள் மரணித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக 115 மரணங்களுடன் மேற்கு வங்கம் 3-வது இடத்தில் இருக்கிறது.
லாக்கப் சாவுகளில் ம.பி. முதலிடம்
ஓராண்டில் பீகாரில் 105, பஞ்சாப்பில் 93, மகாராஷ்டிராவில் 91 பேர் என சிறை காவலில் உயிரிழந்துள்ளனர். போலீஸ் கஸ்டடியில் மத்திய பிரதேசத்தில்தான் மிக அதிகமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 14 பேர் போலீஸ் லாக்கப்புகளில் இறந்துள்ளனர்.
லாக்கப் மரணம்- தமிழகம் 2வது இடம்
போலீஸ் லாக்கப் மரணங்களில் 2-வது இடத்தில் தமிழகமும் குஜராத்தும் இருக்கின்றன. தமிழகம், குஜராத்தில் தலா 12 பேர் ஓராண்டில் லாக்கப்பில் இறந்திருக்கின்றனர். தமிழகத்தின் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸும் போலீசாரால் ஜூன் 22-ந் தேதி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. அதாவது போலீஸ் லாக்கப், சிறை காவலில் ஒருநாளைக்கு 5 பேர் உயிரிழக்கிறார்கள்.
நாடு முழுவதும் 112 என்கவுண்ட்டர்கள்
நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 112 என்கவுண்ட்டர்களை போலீசார் நடத்தியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் மிக அதிகபட்சமாக 39 என்கவுண்ட்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக உத்தரப்பிரதேசத்தில் 26, ஜார்க்கண்ட்டில் 6 என்கவுண்ட்டர்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. இத்தனை போலீஸ் லாக்கப் மரணங்கள், சிறை உயிரிழப்புகள், என்கவுண்ட்டர்களுக்கான காரணங்களை மத்திய அரசு இந்த அறிக்கையில் விவரிக்கவில்லை.