இந்தியாவில் புயல் வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்.. 9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி
டெல்லி: இந்தியாவில் இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக, கடைசி 6 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இம்மாத தொடக்கத்தில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 50 வயதைக் கடந்தவர்களுக்கும் பலவீனமாக உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது.
தடுப்பூசியில் அரசியல் செய்யாதீங்க...விஞ்ஞானிகள் திறமையை அவமதிக்காதீங்க...அமி்த்ஷா காட்டம்!
ஒன்பது நாட்களில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி
இந்நிலையில், இந்தியாவில் தற்போது வரை சுமார் 15.82 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவே பிரிட்டனில் 18 நாட்களும் அமெரிக்காவில் 10 நாட்களும் ஆனதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது. மேலும், கடைசி ஆறு நாட்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
பக்கவிளைவுகள்
இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 1,238 பேருக்கு மட்டும் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் இது வெறும் 0.08% தான். அவர்களில் 11 பேர்(0.0007%) மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களது உயிரிழப்பிற்கும் தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் சில நாட்கள் மந்தம்
கடந்த ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முதல் சில நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்றது. ஏழாம் நாளுக்குப் பின்னரே தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தலைநகரில் இதுவரை திட்டமிடப்பட்ட முன்களப் பணியாளர்களில் சுமார் 86% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள முக்கிய மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கோ-வின் செயலி
இந்தியாவில் கோ-வின் செயலி மூலமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்பு, இச்செயலி மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியும் என்ற நடைமுறை இருந்தது. ஆனால், இது தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் தடுப்பூசி மையங்களுக்குச் செல்லும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது போல நடைமுறை சில நாட்களுக்கு முன் மாற்றியமைக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி
மேலும், வெளிநாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவிஷீல்டு தடுப்பூசி பூட்டான், மாலத்தீவு, நேபாளம், மியன்மார், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரேசில், மொராக்கோ, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு வணிக ரீதியாகத் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த செயலுக்கு உலக சுகாதார அமைப்பும் பாராட்டு தெரிவித்துள்ளது