இந்த 10 மாநிலங்களும் கொரோனாவை கட்டுப்படுத்தினால்.. மொத்த நாடும் மீண்டு விடும்.. பிரதமர் மோடி பேச்சு
கொரோனாவை தடுப்பதில் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா பரவல் சதவிகிதத்தை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள 10 மாநிலங்களில் கட்டுப்படுத்தினாலே நாம் வெற்றியடைந்து விடுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் 10 மாநிலங்களில் 80 சதவிகிதம் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதாகவும் உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் 22 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 16 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 50 ஆயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளனர். தினசரியும் கொரோனாவிற்கு 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் 7 கட்டமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொருளாதாரம் படுபாதாளத்தில் சரிந்துள்ளது. என்னதான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில ஆண்டுகளாவது ஆகும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்து.
இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ காண்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
எனது மகளுக்கே இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. முதல் கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிபர்!
மோடி ஆலோசனை
மோடி உடனான ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் கோரிக்கை
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை குறித்தும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி விவாதித்தார். தங்கள் மாநிலங்களில் உள்ள நிலவரம் குறித்து பல்வேறு முதல்வர்களும் கருத்துக்களை எடுத்துரைத்தனர். தமிழ்நாட்டிற்கு ரூ.9000 கோடி ரூபாய் நிதி வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரூ. 3000 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
80 சதவிகித பாதிப்பு
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதலில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். நாடு முழுவதும் 10 மாநிலங்களில் 80 சதவிகித பாதிப்பு உள்ளது. இந்த மாநிலங்களில் நாம் கொரோனாவை கட்டுப்படுத்தினாலே வென்று விடலாம் என்றார்.
கொரோனாவை வெல்லலாம்
கொரோனா பாதிப்பை விட நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று தெரிவித்தார். சுகாதார பணியாளர்கள் தினம் தினம் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.
அனைவரும் போராட்டம்
கொரோனாவிற்கு எதிராக ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. கொரோனாவை தடுப்பதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் முக்கியமானது. கொரோனா வைரஸ் குறித்த அச்சம் குறைந்து நம்பிக்கை அதிகரித்து வருகிறது இதுவே நமக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உடனடியாக கண்டறிய வேண்டும்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை 72 மணி நேரத்துக்குள் கண்டறிந்தால் கொரோனா பாதிப்பை மிக அதிகமாக குறைக்கலாம். எனவே கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக 72 மணி நேரத்துக்குள் சோதனை செய்யவேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.