முற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்
டெல்லி: முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அது சட்டமானது.
முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து அது தொடர்பான சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மசோதாவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், இதர வட மாநில கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன. தேர்தல் நேரத்தில் இதைக் கொண்டு வருவது ஏன் என்ற கேள்வியை மட்டுமே அவை கேட்டன.
இதையடுத்து முதலில் லோக்சபாவிலும், பின்னர் ராஜ்யசபாவிலும் இது நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது. இதை உடனடியாக தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டுள்ளார்.
இதையடுத்து இந்த மசோதா தற்போது சட்டமாகியுள்ளது.