நாட்டிற்காக பணியாற்ற ஆர்வம்... ராணுவத்தில் சேர 2 லட்சம் பெண்கள் விண்ணப்பம்
டெல்லி: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 100 சிப்பாய் பணியிடங்களுக்கு சுமார் 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கப்பல் படை மற்றும் விமானப் படையில் 13.09 சதவீத பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் இந்திய ராணுவத்தில் சிப்பாய் பிரிவில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ராணுவ சிப்பாய் வேலையில் பெண்களையும் சேர்க்க இந்திய ராணுவம் முடிவு செய்தது.
இதையடுத்து சிப்பாய் பணியில் சேர ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ராணுவத்துக்கு 100 பெண் சிப்பாய்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆர்வம் உள்ள இளம்பெண்கள் ஏப்ரல் 25-ந்தேதி முதல் ஜூன் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், பொது வினாதாள் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து பெண் சிப்பாய் பணியில் சேர நாடு முழுவதும் இளம்பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர். 100 பணியிடங்களுக்கு, 2 லட்சத்துக்கு மேல் இளம்பெண்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
அண்மையில் போர் விமானங்களில் ஆறு பெண் விமானிகள் போர் தாக்குதல் பயிற்சி பெற்றனர். தற்போது 15 லட்சம் ஆண்களைக் கொண்ட ஆயுதப்படையில் பெண்களின் பங்கேற்பும் அதிகரிக்க உள்ளது. இந்த மாத இறுதியில் பெல்காமில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் 100 பெண்களை ராணுவத்தின் காவல் படை பிரிவில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.