'நீங்கள் வலுவாக இருக்க வேண்டும்' - திஷா ரவிக்கு 102 வயது சுதந்திர போராட்ட வீரர் ஆறுதல்
டெல்லி: திஷா ரவி வலிமையாக இருக்க வேண்டும் என்று 102 வயதான சுதந்திர போராட்ட வீரர் துரைசுவாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு சர்வதேச பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.
அந்த ட்வீட்டில் டூல்கிட் லிங்க் ஒன்றை பகிர்ந்திருந்தார். விவசாயிகள் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து அதில் விளக்கப்பட்டிருந்தது. குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்திற்கும் இந்த டூல்கிட்டிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து இந்த டூல்கிட்டை உருவாக்கி, கிரேட்டா தன்பெர்க்குடன் அதைப் பகிர்ந்ததாக திஷா ரவியை கடந்த வாரம் பெங்களூருவில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் இருந்த திஷா ரவியிடம் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் திஷா ரவி ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'உண்மையில் வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் திஷாவை எப்படி தொடர்புப்படுத்தினீர்கள்? சதிக்கும், குற்றத்திற்கும் எங்கே தொடர்பு உள்ளது?' என்று கேள்வியெழுப்பி சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரரும், காந்தியவாதியுமான 102 வயது ஹெச்எஸ் துரைசுவாமி, திஷா ரவி வழக்கு குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "உள்ளூர் மாஜிஸ்திரேட்டிடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல், பெங்களூரில் இருந்து திஷாவை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றது மிகக் கடுமையான நடவடிக்கையாகும். ஆனால், அவர் அதை தைரியமாக எதிர்கொண்டார். நீங்கள் வலுவாக இருக்க வேண்டும். இரக்கமற்ற ஒரு சர்வாதிகார ஆட்சியை நாம் எதிர்கொள்கிறோம், நீங்கள் வலுவாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.