107 வயது தாத்தாவுக்கு இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை... டெல்லி டாக்டர்கள் கின்னஸ் சாதனை
டெல்லியைச் சேர்ந்தவர் 107 வயதான முயதியவருக்கு, மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
டெல்லி: 107 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து டெல்லி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்தவர் குருசரண் சிங் சந்து(107). பாதுகாப்புத் துறையில் மூத்த வரவேற்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த 17ம் தேதி பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயமடைந்தார்.
இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. உடனடியாக அவர் சாணக்யபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வயோதிகம் காரணமாக குருசரணுக்கு சிகிச்சை அளிப்பது கடினமாக இருக்கும் என மருத்துவர்கள் கருதினர்.
ஆனால் அவர்கள் ஆச்சர்யப் படும் அளவிற்கு குருசரணின் சர்க்கரை அளவு சாதாரண அளவிலேயே இருந்துள்ளது. அதோடு வலியிலும் பதட்டப்படாமல் அவர் நிதானமாக நடந்து கொண்டது அவர்களின் ஆச்சர்யத்தை அதிகப்படுத்தியது.
இதனால் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு இடுப்பு எலும்பை மாற்றலாம் என மருத்துவர்கல் முடிவு செய்தனர். ஆனால், அப்படி செய்தாலும் அவரால் இனி எழுந்து நடக்க முடியாது என்பது மருத்துவர்களின் கணிப்பு.
இதனை குருசரணிடமும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து படுக்கையிலேயே கிடக்க விரும்பாத அவர், உடனடியாக அறுவைச் சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை மருத்துவர்கள் குழு 40 நிமிடங்களில் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடிந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் குருசரணின் உடல்நிலை நன்கு தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இந்த அறுவை சிகிச்சை செய்யும்போது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், முதியவரின் உடல்நிலை சிறப்பாகவே இருந்ததால் துணிந்து இந்த அறுவை சிகிச்சையைச் செய்யலாம் என முடிவெடுத்தோம்" என அறுவைச் சிகிச்சைக் குழுவில் இருந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தனை வயதில் ஒருவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்துவது மிக மிக அபூர்வமானது. உலகிலேயே இதுவே முதல்முறையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. எனவே மருத்துவர்கள் இது குறித்து விவரத்தை கின்னஸ் சாதனையாக பதிவு செய்ய நடிவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.