கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் திமுக.. 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வாதம்
Recommended Video
டெல்லி: ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க.கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல் ஆகியோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் விசாரணை தொடங்கியது.
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் புகார் கூறிய டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திமுகவும் அமமுகவும் வழங்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையில் அமர்வின் விசாரணையில் ஓபிஎஸ் தரப்பும் திமுக தரப்பும் காரசார விவாதத்தை முன்வைத்து வருகிறது.
ஓபிஎஸ் தரப்பு வாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவே கூடாது என கடிதம் கொடுத்தவர் திமுகவின் சக்கரபாணி. அப்படி இருக்க அதிமுக எம்எல்ஏகள் 11 பேர் வாக்குப் பதிவில் அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என சொல்லி வழக்கு தொடுப்பது நியாமற்றது.
ஓபிஎஸ் தரப்பு வாதம்: பிரதான எதிர்க்கட்சியான திமுக தொடுத்திருக்க கூடிய இந்த வழக்கு முழுக்க அரசியல் உள் நோக்கம் கொண்டது. நீதிமன்றத்திலும் இந்த அரசியலை கொண்டு வருகிறார்கள். எனவே இந்த வழக்கை அடிப்படையிலேயே ரத்து செய்ய வேண்டும்.
வழக்கு தொடுத்திருக்க கூடிய வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் ஆகியோரும் தற்போது எதிர்க்கட்சியில் உள்ளனர். அவர்கள் அதிமுகவில் இல்லை. எனவே இவர்களின் மனுக்களும் அரசியல் உள் நோக்கம் கொண்டது. எனவே இவற்றையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
நீதிபதி: வழக்கே அரசியல் வழக்குதான்.. அதில் உள்நோக்கம் இருக்க தானே செய்யும்.
ஓபிஎஸ் தரப்பு வாதம்: கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கவே எதிர்கட்சியான திமுக 11 எம்.எல்.ஏகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
11 எம்.எல்.ஏகளும் மீண்டும் கட்சியில் சேர்ந்து விட்டார்கள். அரசுக்கு எதிராக கவர்னருக்கு கடிதம் எழுதிய 18 எம்எல்ஏக்களும் மீண்டும் கட்சியில் சேரவே இல்லை. இது முழுக்க முழுக்க உள்கட்சி விவகாரம். இதில் எதிர்கட்சியான திமுகவிற்கு என்ன வேலை? இப்படியாக விவாதம் போகிறது.