சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட காலத்தில் ரயில்வே வளாகங்களில் மரணித்த 110 இடம்பெயர் தொழிலாளர்கள்
டெல்லி: கொரோனா லாக்டவுனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட காலத்தில் ரயில்வே வளாகங்களில் 110 இடம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்துள்ளனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுன் திடீரென அமல்படுத்தப்பட்டது. இதனால் பிற மாநிலங்களில் பணிபுரிந்த இடம்பெயர் தொழிலாளர்கள் என்ன செய்வது என் தெரியாமல் விழிபிதுங்கினர்.
பணிபுரிந்த இடங்களில் வேலைவாய்ப்பும் இல்லை, ஊதியமும் இல்லை, தங்க இடமும் இல்லை என்ற சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு நடைபயணமாகவே பெருந்திரளான இடம்பெயர் தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இடம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணமாகவே நடந்தனர்.
இடம்பெயர் தொழிலாளர்களின் இந்த நடைபயணம் எத்தனை கொடியது? என்பதை பல்வேறு சம்பவங்கள் வெளிப்படுத்தின. இது கொரோனா காலத்தில் பெரும் அதிர்வலைகளை தேசம் முழுவதும் ஏற்படுத்தியது. பின்னர் மத்திய அரசு இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்தது. இதற்கான கட்டணத்தை மத்திய- மாநில அரசுகள் செலுத்தின.
4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 63 லட்சம் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மண்ணுக்குத் திரும்பினர். இப்படி கொரோனா லாக்டவுன் காலத்தில் பல்வேறு துயரங்களுக்கு இடையே சொந்த ஊரை நோக்கி சென்ற இடம்பெயர் தொழிலாளர்களில் 110 பேர் ரயில்வே வளாகங்களில் மரணித்துப் போயினர் என்கின்றன புள்ளி விவரங்கள்.
கொரோனா ஒருநாள் பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா 2-வது இடம்
இவர்களது மரணங்களுக்கு நீண்டகால நோய்வாய்ப்பட்டிருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ரயில்வே தண்டவாளங்களில் நடைபயணமாக சென்றபோது சரக்கு ரயில்கள் மோதி பலியான சம்பவங்களும் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது உண்டு. லாக்டவுன் அல்லாத காலங்களில் பொதுவாக நாள் ஒன்றுக்கு 75 ரயில்வே மரணங்கள் நிகழ்வது வழக்கம்.
இதேபோல் ஒவ்வொரு மாதமும் ரயில்வே துறையிடம் இருந்து இழப்பீடு கோரி 700க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின்றன. ஒவ்வொரு ரயில்வே மரணத்துக்கும் ரூ8 லட்சம் இழப்பீடு வழங்கி வருகிறது ரயில்வே என்பது குறிப்பிடத்தக்கது.