கனமழை.. மோசமான வானிலை.. கடைசியில் நிகழ்ந்த மாற்றம்... '2008 அக்.22' ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1
Recommended Video
டெல்லி: 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் (அக்டோபர் 22ம் தேதி தான்) ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி 11 ராக்கெட்டை பயன்படுத்தி சந்திரயான் -1 விண்கலத்தை நிலவுக்கு முதல் முறையாக இந்தியா அனுப்பி வைத்து வரலாற்று சாதனை படைத்தது.
இந்தியாவில் இருந்து நிலவை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 1 விண்கலம் 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி அதிகாலை 6:22 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி 11 ராக்கெட் மூலம் சீறிப்பாய்ந்தது.
நவம்பர் 8ம் தேதி சந்திரயான் விண்கலம் நிலவைச் சுற்றும் துருவ வட்டப்பாதையில் நுழைந்தது. அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி மாலை 5 மணிக்கு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்னிலையில் சந்திராயன் 1 விண்கலத்தில் இருந்து இம்பேக்ட் ப்ஃரோப் என்ற சிறிய கலன் நிலவின் தரையில் மோதி வெற்றிகரமாக இறங்கியது. இதை கண்டு விஞ்ஞானிகள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிலாவிற்கு ரோபோ.. ஹீலியம் எடுக்க மாஸ் திட்டம்.. வேற லெவலில் பிளான் போடும் இஸ்ரோ!
சரித்திர சாதனை
சந்திரயான் 1 விண்கலத்தின் இம்பேக்ட் ப்ஃரோப் கலன் நிலவை தொடும் முன்பே, நிலாவின் வளி மண்டலத்தில் நீர் இருப்பதை கண்டுபிடித்தது. இதை வைத்து நிலவை ஆராய்ந்ததில் நிலவில் உறை பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தது. இதன் மூலம் உலக அரங்கில் விண்வெளி ஆய்வில் நிலவில் நீரைக் கண்ட முதல் நிலவுக் கலன்சந்திராயன்-1 என்ற சரித்தர சாதனை படைத்தது.
மங்கள்யான்- சந்திராயன் 2
மொத்தம் 312 நாட்கள் நிலவின் சுற்றுப்பாதையில் 3400 முறை சந்திராயன் 1 விண்கலம் சுற்றிவந்து ஆய்வு செய்தது. அதாவது 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வரை நிலவை ஆய்வு செய்தது. இந்த ஆய்வு தான் பின்னாளில் இந்தியாவை செவ்வாய்க்கு மங்கள்யான் செயற்கைகோளை ஏவ உந்துசக்தியாக இருந்தது. இதேபோல் சந்திராயன் 2 திட்டத்திற்கும் வழிகாட்டியாக இருந்தது.
வானிலை மோசம்
சந்திராயன் 1 திட்டத்தின் இயக்குனராக இருந்த டாக்டர் எம் அண்ணாதுரை நிலவில் சந்திரயான் 1 விண்கலத்தை ஏவிய நிகழ்வுகளை மனம் திறந்துள்ளார். சந்திரயான் 1 விண்கலத்தை விண்ணில் ஏவும் நாளுக்கு முதல் நாள் இஸ்ரோ மிகவும் நெருக்கடியை எதிர்கொண்டது. அன்று இரவு இடியுடன் கனமழை பெய்தது. இதனால் விண்ணில் ஏவ திட்டமிட்ட நேரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் வானிலை மிக மோசமாக இருந்தது.
சட்டென மாறிய வானிலை
இதனால் என்ன நடக்குமோ என்று அதிர்ச்சியில் இருந்தோம். ஆனால் சந்திராயன் 1 விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரத்தில் அதிர்ஷ்டவசமாக அரை மணி நேரம் மழை இல்லாமல் புயல் இல்லாமல் அமைதியாக வானிலை மாறியது. வெற்றிகரமாக விண்ணில் ஏவினோம். ஆனால் அதன் பிறகும் இடியுடன் மழை பெய்தது.
கடவுளிடம் வேண்டினார்கள்
இதனால் சந்திரயான் 1 விண்கலத்தை விண்ணில் ஏவிய நாளில் பணியில் இருந்த 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பதற்றத்துடனும், கவலையுடனும் இருந்தார்கள். வெற்றிகரமாக விண்ணில் செல்ல வேண்டும் என தங்களின் தெய்வங்களை அவர்கள் வேண்டிக்கொண்டனர். பல அதிகாரிகள் தங்களின் இஷ்ட தெய்வங்களின் புகைப்படங்களை கணிணியில் முகப்பில் வைத்து வேண்டியபடி பதற்றத்துடன் இருந்தார்கள். சிலர் திருப்பதி கோயிலில் இருந்த பிரார்த்தனை செய்து வந்த லட்டுவுடன் அமர்ந்து இருந்தனர்.
இஸ்ரோ
இஸ்ரோ அமைப்பு அன்று தான் நிலவிற்கு ஒரு விண்கலத்தை அனுப்பி இருந்தது. 36 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு செயற்கை கோளை கண்காணிக்கிறது என்பதால் இந்த பதற்றம் இருந்தது.
சரி செய்தோம்
முன்னாள் இஸ்ரோ தலைவர் கே மாதவன் நாயர், 2008ம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு 2மணி நேரத்திற்கு முன்பு தடுமாற்றத்தை எதிர்கொண்டார். சந்திரயான் விண்கலத்தை விண்ணில் ஏவும் முன்பு அதன் உந்து சக்தியில் கசிவு ஏற்பட்டது. அதை கவனித்து சரி செய்தார். அதன்பிறகு திட்டமிட்டபடி பணி தொடங்கியது.
நிம்மதி பெருமூச்சு
என்னதான் பணிகள் சிறப்பாக நடந்தாலும் நாங்கள் ஒரு பதற்றத்துடன் இருந்தோம். நவம்பர் 8, 2008 அன்று, சந்திரயான் -1 நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக பாய்ந்த பின்னரே நாங்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டோம்.
கனிமங்கள்
சந்திரயான் -1 வட துருவப் பகுதியில் நீர் பனியைக் கண்டுபிடித்ததுடன், நிலவின் மேற்பரப்பில் மெக்னீசியம், அலுமினியம் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றைக் கண்டறிந்தது, இது உலக அளவில் மிகப்பெரிய சாதனையாகும்" என்றார்.