1971 டூ 2021.. வரலாற்று நிகழ்வுக்கு சாட்சியான ராஜபாதை.. முதல் முறையாக அணிவகுத்த வங்கதேச ராணுவம்!
டெல்லி: டெல்லி ராஜபாதை, இன்று ஒரு வரலாற்று நிகழ்வுக்கு சாட்சியாக மாறியது. ஆம்.. முதல் முறையாக வங்கதேச ராணுவ வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
மொத்தம் 122 பேர் கொண்ட ராணுவக் குழு இந்த அணிவகுப்பில் பங்கேற்றது. இதற்கு லெப்டினன் கர்ணல் அபூ முஹம்மத் ஷானூர் ஷவான் தலைமை தாங்கினார்.
இந்த வருட குடியரசு தின விழாவில் வங்கதேச ராணுவம் பங்கேற்பதில் ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது.
சரணடைந்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் ராணுவத்தை சரணடைய வைத்து, வங்கதேசத்தை தனி நாடாக மாற்றிய இந்திய ராணுவத்தில் வெற்றி, சமகால ராணுவ வரலாற்றில் யாரும் பெற்றிராத வெற்றி என்று அடித்துச் சொல்ல முடியும். இந்திய ராணுவத்தின் தீரத்தால், 1971ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி வங்கதேசம் தனி நாடாக உதயமானது.
பொன் விழா ஆண்டு
தற்போது இந்திய ராணுவத்தின் வெற்றி மற்றும் வங்கதேசம் பிறந்த 50வது ஆண்டு பொன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில்தான் வங்கதேச ராணுவத்திற்கு நமது ராஜபாதையில் அணிவகுத்து செல்லும் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்பு 50 ஆண்டுகளை தாண்டியும் மிக நெருக்கமாக இருக்கிறது என்று உலக நாடுகளுக்கு சமிக்ஞை கொடுக்கப்பட்டுள்ளது.
ஏழை நாடாக இருந்தது
சுதந்திரம் பெற்ற போது உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது வங்கதேசம். ஒரு சதுர அடிக்கு அதிக மக்கள் தொகை என்ற விகிதத்தில் மக்கள் தொகை நெருக்கம் கொண்ட நாடாக உள்ளது தலைநகர் டாக்கா. ஆனால், அந்த நாட்டு மக்கள் உழைப்பு, அரசின் திட்டங்கள் காரணமாக தற்போது பொருளாதாரம், மனித வளம் உள்ளிட்ட பல்வேறு குறியீடுகளில் அந்த நாடு உயர்வடைந்துள்ளது.
வளரும் வங்கதேசம்
அவ்வளவு ஏன்.. இந்தியாவை விடவும் பொருளாதார வளர்ச்சி விகிதம் அங்கு அதிகமாக இருக்கிறது. பாகிஸ்தானை பற்றி சொல்லவே வேண்டாம். இந்த விஷயங்களில் வங்கதேசத்துக்கு பக்கத்திலேயே வரமுடியாது.
நல்ல நாள்
14 நாள் நடந்த போருக்கு பிறகு, பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய சரணடைதல் அரங்கேறியது. சமீப வரலாற்றில் வேறு எந்த நாட்டு ராணுவமும் இந்த அளவுக்கு சரணடைந்தது கிடையாது என்கிறார்கள் ராணுவ நிபுணர்கள். இந்திரா காந்தி மற்றும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் புத்திசாலித்தனமான தலைமையும், இருபுறமும் உள்ள மக்களின் தியாகங்களும் இதற்கு காரணம். அதை நினைத்து பார்க்க இது ஒரு நல்ல தருணம்.