சாலை ஓரங்களில் 125 கோடி மரங்கள் நடப்படும்... மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்
டெல்லி: 5 ஆண்டுகளில், ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிதின் கட்காரிக்கு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெடுஞ்சாலை துறைக்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளோம். அதன்படி, வரும் 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அவற்றில் 22 பசுமை வழிச்சாலைகளும் அடங்கும் என்றார்.
மேலும், 20 முதல் 25 நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றை 100 நாட்களில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் எனவும் கூறினார்.
முந்தைய 5 ஆண்டுகளில், ரூ.11 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 26 கி.மீ தூரம் வரையில் சாலைக் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டன. ஒரு ரூபாய் கூட ஊழலுக்கு இடம் தராமல் வேலைகள் செய்யப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதையும் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்த பாடுபட்டு வருவதாகவும் விளக்கமளித்தார்.
பாரீர் பாரீர்.. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் சாலை ஓரங்களில் எல்லாம் சுமார் 125 கோடி மரங்களை நடப்போவதாகவும் நாள் ஒன்றுக்கு 40 கி.மீ தூரம் வரையில் சாலை கட்டமைப்பு மேற்கொள்ளப்போவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் . சாலை வசதிகளை மேம்படுத்திவதில் மிகப்பெரிய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே மும்பை- டெல்லி இடையேயான நெடுஞ்சாலையில் பணிகள் தொடங்கியுள்ளது என்றும் பேசினார்.