டெல்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ்
டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்பட 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. வியாழக்கிழமையான நேற்று ஒரு நாளில் மட்டும் 128 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2376 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 50 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 3வது மாநிலமாக டெல்லி உள்ளது. டெல்லியில் இதுவரை 808 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1518 பேர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்பட 14 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்துஅனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் 14 பேரில் எத்தனை பேர் டாக்டர்கள், எத்தனை பேர் நர்சுகள் என்பது தெளிவாக தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் ஒரே நேரத்தில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.