144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
Recommended Video
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கு முடிய உள்ள நிலையில் அங்கு 144 தடை போடப்பட்டுள்ளது.
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் இந்த வழக்கில் முக்கிய மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
எத்தனை பேர்
மொத்தம் 14 அமைப்புகள் சார்பாக இதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அயோத்தி வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர்.
வழக்கு விசாரணை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டு தற்போது விசாரணை முடியும் நிலையை எட்டியுள்ளது. அதன்படி அயோத்தி வழக்கு விசாரணைக்கு கடைசி நாளாக அக்டோபர் 17ம் தேதி குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
என்ன தடை
இதனால் தற்போது உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. 4 பேருக்கு மேல் சாலையில் ஒன்றாக செல்ல, கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசியல் கூட்டங்களுக்கும் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி எப்படி
டிசம்பர் 10 வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். அயோத்தியில் சிஆர்பிஎப் போலீஸ் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அங்கு ராணுவம் குவிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.