டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை?... போலீசாரின் கழுகுப்பார்வையில் தலைநகர்!
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்பட டெல்லியின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறி உள்ளது. சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். தடுப்புகளை போலீசார் மீது விவசாயிகள் எறிந்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள்.
விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் அதில் ஏற்றியுள்ளனர். டெல்லி முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் முகாமிட்டு உள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. செங்கோட்டையை சுற்றியுள்ள போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம், நாடளுமன்ற வளாகம் ஆகிய பகுதிகளில் டிரோன்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அந்த கூட்டத்தொடர் முடியும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.