சட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதால் நாடு கடத்தப்பட்ட 145 இந்தியர்கள் இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்குள் மெக்சிகோ வழியாகத்தான் பெருமபாலானோர் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்.
இதனால் மெக்சிகோ அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் அத்தனை பொருட்களுக்கும் கடும் வரிவிதிக்க நேரிடும் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து அக்டோபர் மாதம் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். பின்னர் அமெரிக்காவில் இருந்து அக்டோபர் 23-ந் தேதி 117 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது 145 இந்தியர்கள், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். 145 இந்தியர்களுடன் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாட்டவரும் ஒரே விமானத்தில் அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்டு டெல்லி திரும்பியவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். சர்வதேச ஏஜெண்டுகளிடம் ரூ10 முதல் ரூ15 லட்சம் வரை கொடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக நாடு கடத்தப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.