குளிரால் அல்ல.. கொரோனாவால் நடுங்கப்போகுது டெல்லி.. உஷாராக இருப்பது நல்லது... எச்சரிக்கும் ஆய்வு
டெல்லி: வரும் குளிர் காலத்தில் டெல்லி நடுங்கப்போகிறது.. குளிரால் கிடையாது.. கொரோனாவின் அதிகபட்ச பரவல் காரணமாக என்பது போல ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, இந்திய நோய் கட்டுப்பாட்டு மையம்.
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர்.விகே.பால் தலைமையிலான நோய் கட்டுப்பாட்டு மையத்தின் குழு இந்த ஆய்வறிக்கையை, டெல்லி அரசுக்கு கொடுத்துள்ளது.
மருத்துவமனைகளில் போதிய வசதிகளை செய்து வைக்க வேண்டும் என்று இப்போதே ஒரு வார்னிங்கையும் கெஜ்ரிவால் அரசுக்கு கொடுத்துள்ளது இந்த குழு.
#JusticeForKalaivani சிறுமி கலைவாணியின் படுகொலைக்கு நீதி வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
15,000 கேஸ்கள்
குளிர்காலத்தில் டெல்லியில் தினமும் சுமார் 15,000 அளவுக்கு கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். இதற்கு முக்கிய காரணம், டெல்லியில் நிலவும் கடும் குளிரால், நுரையீரல் தொடர்பான வேறு பல நோய்கள் பாதித்தவர்கள் கொரோனா தொற்றுக்கு எளிதில் ஆளாக வாய்ப்பு உள்ளது.
காரணம் என்ன
பிற நுரையீரல் பாதிப்பு நோயாளிகள் அதிக அளவுக்கு மருத்துவமனைக்கு வரும் கால கட்டம் குளிர்காலம்தான், இது தவிர இனி தசரா, தீபாவளி என பண்டிகை காலம் வரிசையாக வருவதால், மக்கள் பொது இடங்களில் அதிகம் கூடுவார்கள். அப்போது நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த மூன்றும்தான் டெல்லியில் கொரோனா அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது அந்த ஆய்வு அறிக்கை.
டெல்லி மருத்துவ கட்டமைப்பு
இது மட்டும் கிடையாதாம். டெல்லியிலுள்ள மருத்துவ கட்டமைப்பு காரணமாக பிற அண்டை மாநிலங்கலைச் சார்ந்த பல நோயாளிகளும் இந்த காலகட்டத்தில்தான், டெல்லியை நோக்கி அதிகம் வருவார்கள். இதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பணி அதிகரித்துவிடும். இது மருத்துவமனை கட்டமைப்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது அந்த ஆய்வு.
குறைந்த கொரோனா
டெல்லியில் ஆரம்பத்தில் மிக வேகமாக கொரோனா பரவல் இருந்தது. தற்போது குறைந்து வருகிறது. நேற்று அம்மாநில சுகாதாரத்துரை வெளியிட்ட தகவல்படி, 24 மணி நேரத்தில், 2,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,833 ஆக அதிகரித்தது. ஆனால், தினமும் 15 ஆயிரம் நோயாளிகள் என்ற அளவுக்கு நிலைமை போனால், அப்போது ரொம்ப கஷ்டம் என்ற அச்சத்தை இந்த அறிக்கை ஏற்படுத்தியுள்ளது.