புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்
டெல்லி: கொரோனா வைரஸ் தொடர்பான லாக்டவுனுக்கு மத்தியில் நகரங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்கள் அழைத்துச் செல்ல அதிகபட்சம் 15 நாட்கள் போதும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை சொந்த மாநிலம் அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளும் தேவை என்பதால், தனிமைப்படுத்தலுக்கான புதிய வழிகாட்டுதல்களை இப்போது வெளியிட வேண்டாம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை கோரியது.
மத்திய அரசுக்காக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜூன் 3 ஆம் தேதி வரை ரயில்வே 4,228 சிறப்பு "ஷ்ரமிக்" ரயில்களை இயக்கி 57 லட்சம் பேரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது. 41 லட்சம் பேர் சாலைமார்க்கமாக வாகனங்கள் வாயிலாக வீடுகளுக்கு சென்றுள்ளனர், நகரங்களை விட்டு வெளியேறிய மொத்த புலம்பெயர்ந்தோர் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர். "ஷ்ரமிக்" ரயில்களில் தண்ணீர், உணவு அல்லது மருந்து வழங்கப்படுகிறது. அவை வழங்கப்படாமல் எந்த தொழிலாளியும் இறந்தது கிடையாது என்று வாதிட்டார்.
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிகபட்ச ரயில்கள் சென்றுள்ளன. "எத்தனை தொழிலாளர்கள் இன்னும் போகவில்லை, அதற்கு எத்தனை ரயில்கள் தேவை என்பதை கண்டறிய ஒரு சாாட் (விளக்கப்படம்) எங்களிடம் உள்ளது. மாநிலங்களும் விளக்கப்படங்களைத் தயாரித்துள்ளன" என்று மேத்தா மேலும் கூறினார்.
ஷாக்கிங்.. நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி!
நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.ஆர் ஷா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இந்த வாதங்களை கேட்டறிந்தது.
விளக்கப்படத்தின் படி, மகாராஷ்டிரா ஒரு ரயிலை மட்டுமே இயக்க கேட்டுள்ளதே என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.
இதை ஒப்புக்கொண்ட சொலிசிட்டர் ஜெனரல், ஏற்கனவே மகாராஷ்டிராவிலிருந்து 802 ரயில்களை இயக்கியுள்ளோம் என்பதால் ஒரு ரயில் மட்டும் கூடுதலாக போதும் என அந்த மாநிலம் தெரிவித்துள்ளது என விளக்கம் அளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "அனைத்து புலம்பெயர்ந்தோரையும் அழைத்துச் செல்ல உங்களுக்கும், மாநிலங்களுக்கும் 15 நாட்கள் அவகாசம் தருவோம். அவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பிற வகையான நிவாரணங்களை வழங்குவது மாநிலங்கள் பொறுப்பு. அதுகுறித்து அனைத்து மாநிலங்களும் பதிவு செய்ய வேண்டும்ன். புலம்பெயர்ந்தோரின் பதிவு இருக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்காக ஆஜரான வக்கீல் கொலின் கோன்சால்வ்ஸ், வாதிடுகையில், மாநிலங்களில், பதிவு முறை செயல்படவில்லை, இதனால் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்ய முடியவில்லை. ஏற்கனவே, இரண்டு உயர் நீதிமன்றங்கள், இந்த பதிவு முறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன. அதை எளிமைப்படுத்த வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.