டெல்லி போராட்ட சம்பவம்... இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண டெல்லி போலீசார் அனைத்து மொபைல் மற்றும் வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை வேறு வழியில் செல்ல தூண்டிய விவசாயிகள் சங்க தலைவர்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
வன்முறையாக மாறிய பேரணி
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நேற்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் தடுப்புகளை போலீசார் மீது எறிந்த விவசாயிகள் முன்னோக்கி சென்றதால் கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது.
144 தடை உத்தரவு
போலீசார் தடியடி நடத்தினார்கள். டெல்லி முழுவதும் வன்முறைக்களமாக ஆனது. டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. ஆனாலும் விவசாயிகள் தடையை மீறி சென்றதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவியது. தற்போது டெல்லியில் 144 தடை உத்தரவு உள்ளது. அங்கு நிலைமை ஓரளவு சீராக உள்ளது. இந்த நிலையில் இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வீடியோ காட்சிகள் ஆய்வு
டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண டெல்லி போலீசார் அனைத்து மொபைல் மற்றும் வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். லல்கிலா, மத்திய டெல்லி, முகர்பா மற்றும் நாங்லோய் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களின் காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
விவசாய சங்க தலைவர்கள்
போலீசாரை தாக்கி, செங்கோட்டையின் கோபுரங்களின் மீது ஏறி, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் மொபைல் வீடியோ காட்சிகள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் போலீசாரால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களை வேறு வழியில் செல்ல தூண்டிய விவசாயிகள் சங்க தலைவர்களும் அடையாளம் காணப்படுகிறார்கள்.